சென்னை,செப்.24- சிறுபான்மையினரின் நலன், உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்றா சற்குணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை யன்று காலமானார்.
அவரது மறை வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கலைஞருடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். அவரது பிறந்த நாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவு. கிறிஸ்தவ பெருமக்களுக்கு மட்டுமின்றி, சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இசிஐ திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும், இந்திய சமூக நீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குடும்பத்தினர் – உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.