காசா மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் சென்னையில் வருகின்ற 8.10.2025 அன்று காலை 10.00 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு கு. செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், விசிக நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. நித்தியானந்தன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர். சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன், இரா. வேல்முருகன், ஜி. செல்வா, எஸ். கோபால், பி.எஸ். பாரதி அண்ணா, கே. நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
காசா மீது இனப்படுகொலைகளை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
