கோவை, ஜூலை 8-
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சமூக ஆர்வலர் மருத்துவர் ரமேஷ்சை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்து வரும் ஜம்புகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
கோவை கணுவாய் அருகே ஜூன் 24 அன்று டாஸ்மாக்கில் குடித்து விட்டு வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்கள் மோதியதில் சமூக ஆர்வலரான மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் சாந்தலா படுகாயமடைந்திருந்த நிலையில் மருத்துவர் ரமேஷ் பலரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என மனைவியின் உடலுடன் நடுரோட்டில் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினார். அதனை தொடர்ந்து அரசு தரப்பில் எழுத்துபூர்வமாக டாஸ்மாக் கடை எண் 2222 மூடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மருத்துவர் ரமேஷ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிகிச்சை பெற்று வரும் மகள் சாந்தலா உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது :
ஆனைக்கட்டி சாலையில் உள்ள ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பல உயிர்களுக்கு ஆபத்து விளைவித்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் நீட்சியாக கடந்த 17.12.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று அந்த கடையை மூடாததன் விளைவு தற்போது மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே கேரள அரசு இயற்கையை பாதுகாக்கவும், அடிக்கடி விபத்து ஏற்படுவதாலும் அட்டப்பாடி - அகழி - ஆனைக் கட்டி பகுதிகளை மது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் விபத்தும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வேகமாக பைக்கில் வந்ததன் விளைவாகவே ஏற்பட்டிருக்கிறது. விபத்து ஏற்படுத்தியவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் முழு குடிபோதையில் இருந்ததை கோட்டத்தூர் பழங்குடியினர் மருத்துவமனையின் பதிவேடுகளும் உறுதி செய்கின்றன. இனிமேலாவது வட்டாட்சியர் அளித்துள்ள உறுதிமொழிப்படி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து நிரந்தரமாக டாஸ்மாக் கடை எண் 2222 மூடப்படும் என்ற உறுதிமொழியை மாவட்ட நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அப்பகுதியில் குடிபோதையில் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கி மக்களை அச்சுறுத்தி வருபவர்களை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் இருந்தனர்.