tamilnadu

img

கோவை மாநகரில் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ‘டிரைக் பைக்’

ரோந்துப்பணிகளை மேற்கொள்ள  வசதியாக கோவை மாநகர காவல்துறைக்கு ட்ரைக் பைக் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மாநகர போலீசார் சுலபமாக ரோந்துப்பணியை மேற்கொள்ளும் விதமாக ஆட்டோக்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வழங்கப்பட்டன. இதனிடையே, ரேஸ்கோர்ஸ், வ.உ.சி பூங்கா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வசதியாகக் கோவை மாநகர காவல்துறைக்கு ட்ரைக் பைக் வாங்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கரங்கள் கொண்ட இந்த ட்ரைக் பைக்கில், போலீசார் சுலபமாக நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ட்ரைக் பைக்கில் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் பொதுமக்களிடம் அறிவிப்புகளை போலீசார் சுலபமாகத் தெரிவிக்க முடியும்.

காவல்துறையை நவீனமயமாக்கும் விதமாக  வாங்கப்பட்டுள்ள இந்த ட்ரைக் பைக்-ஐ இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும், இந்த வண்டியை பாலகிருஷ்ணன் இயக்கி பார்த்து, வாகனத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த ட்ரைக் பைக் விரைவில் கோவை மாநகரம் முழுவதும் ரோந்து செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.