பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைதாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான்-டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, ”எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதைப் பரிசீலித்து சலமாபாத் மற்றும் சக்கான்-டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், எல்லை தாண்டிய வர்த்தகத்தை தடை செய்து இருப்பது பிற்போக்குத்தனமானது என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அண்டை நாட்டுடனான உறவை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.