கடலூர், ஆக.30-
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும் அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக நித்தியானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நித்தியானந்தம் கடலூர் மாவட்டம் பெண்ணை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து நித்தியானந்தம் தங்கி இருந்ததாக கூறப்படும் வீட்டில் ஆகஸ்ட் 30 புதனன்று தேசிய புலனாய்வு முகமைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நித்தியானந்தம் வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.