“எமக்குத்தொழில் கவிதை” என இயங்குகிற முழுநேர எழுத்தா ளர்கள் இருக்கிறார்கள். வேறு பணிகளைச் செய்துகொண்டே எழுதுபவர்க ளும் இருக்கிறார்கள். இலக்கியப் படைப்பின் மூலமாகச் சமுதாயத்திற்காக வாதாடும் எழுத்தாளர், நீதிமன்றப் பணியின் மூலமாகத் தனது கட்சிக்காரர்களுக்காக வாதாடும் வழக்குரைஞர் என இரு தளங்களில் செயல் பட்டுவருபவர் டி.எஸ். என்றழைக்கப்படும் தோழர் டி.செல்வராஜ். 1936ம் ஆண்டு நெல்லை மாவட்டம் தென் களம் கிராமத்தில் பிறந்தவர் செல்வராஜ். இவ ருடைய தந்தை கேரளத்தில் தேவிகுளம் தேயி லைத் தோட்டத்தில் கங்காணியாக வேலை செய்து வந்தார். சிறுவன் செல்வராஜ் மூணாறு பகுதியில் பள்ளிப்படிப்பை முடித்து நெல்லை யில் இந்து கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர், மூத்த வழக்கறிஞர் வி. வெங்கட்ராமனின் ஜூனியராக 10 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் சேர்த்தார். 1940களி லிருந்து 1980வரை சென்னை உள்ளிட்டு மாநி லம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகளுக்காக நீதி மன்றங்களில் வாதாடியவரான வி. வெங்கட் ராமன் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். இத னால் பல்வேறு போராட்டங்களின்போது இவ ரும் கம்யூனிஸ்ட்டுகளோடு சேர்ந்து கைது செய்யப்பட்டதுண்டு.
1971ம் ஆண்டு டி.எஸ். திருமணம் நடை பெற்றது. அதற்கடுத்த ஆண்டு திண்டுக்கல் நகரத்தில் குடியேறியவர் இன்று வரையில் அங்கே ஒரு முன்னணி வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். “நீங்கள் எழுத்தாளராக உருவானது எப்படி” என்று கேட்ட போது “நெல்லையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது டிக்கன்ஸ், டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, புது மைபித்தன், மாப்பசான் போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை படித்தேன். அவர்கள் எழுத்துக்களின் உள்ள டக்கங்களும், கையாண்ட சித்தரிப்பு நடையும் ஏற்படுத்திய தாக்கம்தான் என்னையும் எழுதத் தூண்டியது,” என்றார். மூணாறில் இவர் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் கேரள மாநிலம் அரசிய லில் பல மாற்றங்களைச் சந்தித்தது. கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் இ.எம்.எஸ், ஏ.கே.ஜி, போன்றோர் பங்கேற்போடு கேரளமே போராட்டக்களமாக திகழ்ந்தது. இத்தகைய தாக்கத்தோடு நெல்லையில் கல்லூரியில் சேர்ந்தார் டி.எஸ். எழுத்துலகத்தில் புகழ்பெற்று விளங்கிய நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன், ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பு இவரது சிவப்புச் சிந்த னையைச் செழுமைப்படுத்தியது.
‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘பிரசண்ட விகடன்’, ‘ஜனசக்தி’ போன்ற இதழ்களுக்கு சிறுகதை கள் எழுதினார். தோழர் அறம் வளர்த்த நாதன் தன்னுடன் அக்காலத்திய அரசியல் நிலைமை கள் குறித்துப் பேசியதையும் நினைவு கூர்கி றார் டி.எஸ். (அறம் வளர்த்த நாதன் இவருக்கு சீனியர் மாணவர். அவரைப் பற்றியும் இந்தத் தொடரில் பதிவு செய்திருக்கிறோம்.) முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாள ரான டி.எஸ் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தபோது மாணவர் சங்க உறுப் பினராகி பல இயக்கங்களில் பங்கேற்றிருக்கி றார். சென்னையில் வி.பி.சிந்தன், ஜீவானந்தம், போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்க ளோடு ஏற்பட்ட தொடர்பு இவரை ஒரு கம்யூனிஸ்ட்டாக உருவாக்கியது. “தோழர் வி.பி.சியுடன் பேசுவதே ஒரு தனி அனுபவம்; அவர்தான் என்னை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினாக்கினார்” என நெகிழ்வோடு கூறினார். சட்டக்கல்லூரி மாணவராக இருந்த போது ‘ஜனசக்தி’ அலு வலகத்திற்கு சென்றதையும் அந்த இதழுக்கு கதைகள் எழுதியதையும் பெருமையாக கூறினார்.
சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வழக்குரைஞராகக் பணியாற்றிய ஆண்டுகள் தனது வாழ்க்கையில் முக்கிய மான காலகட்டம் எனக் குறிப்பிட்டார். சீனியர் வழக்குரைஞர் வி.வெங்கட்ராமன் அலுவல கத்தில் அவரது மருமகன் எம்.வெங்கட்ராமன் ஒரு ஜூனியர் வழக்குரைஞராக இருந்த தைக் குறிப்பிட்டார் டி.எஸ். அந்த எம்.வெங்கட்ராமன் தற்போது ஒரு சீனியர் வழக்க றிஞர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்க ளுக்காக நீதிமன்றங்களில் வழக்குகளில் ஆஜ ராகி வாதாடுகிறவர். இந்த இரண்டு பேருட னும் அடியேன் ஓராண்டு சென்னையில் பணியாற்றிப் பயிற்சி பெற்றிருக்கிறேன். அன்றாடம் எங்களது பேச்சு களில் வழக்குகள் மட்டுமல்ல, நடப்பு அரசியலும் சூடான விவாதப்பொருளாக இருக்கும். சென்னை எம்.ஆர்.எஃப் ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டிய கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது தோழர்கள் வி.பி.சி., பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.ஹரிபட், ஆர்.குசேலர், ஆகியோர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (மிசா) கைது செய்யப்பட்டனர். இவர்க ளுக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் சிஐடியு பொதுச்செயலாளருமான தோழர் பி.ராம மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி நால்வரும் விடுதலை செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த தானும் தோழர் பி.ஆரின் வாதத்தை கண்டு மெய்மறந்து நின்றதாக டி.எஸ். பெருமை யோடு கூறினார்.
தோழர் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங் கட்ராமன் ஆகியோர் வி.வெங்கட்ராமனுடன் அவரது அலுவலகத்தில் வழக்கு குறித்து விவாதிப்பார்கள். அதன் பிறகு வழக்கு தொடர்பாக புத்தகங்களை வி.வெங்கட் ராமன் கொடுத்ததை தோழர் பி.ஆர் விட்டுக்குச் சென்று டி.எஸ். கொடுத்து வந்தார். மூவரும் வழக்கு குறித்து விவா திப்பதைப் பார்த்து டி.எஸ். பிரமித்து போன தாகவும், தோழர் வைகையும் அதே போன்ற பிரமிப்புக்கு ஆளாகி வழக்கறிஞராக ஆன தாகவும் டி.எஸ். தெரிவித்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர் ஜீவானந்தத்தை சந்தித்ததையும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது அதில் இணைந்த டி.எஸ், சட்டக்கல்லூரிக்கு எதிரில் ஸ்ட்ரிங்கர் தெரு வில் இருந்த சிஐடியு – சிபிஎம் அலுவல கத்தில் விபிசி, சுந்தரய்யா ஆகிய தலை வர்களையும், சென்னை மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. விடுதியில் தோழர் ஏ.கே.ஜியையும் சந்தித்து பேசியதையும் பெருமையாக டி.எஸ். நினைவு கூர்கிறார். 1972ம் ஆண்டு திண்டுக்கல்லுக்குச் சென்று டி.எஸ். வழக்குரைஞர் பணியை தொடர்ந்தார். அப்போது தோழர் ஏ. பாலசுப்பிரமணியம், என். வரதராஜன், எஸ்.ஏ. தங்கராஜன் போன்ற தோழர்களோடு உரையாடியதும், இயக்கத்தில் கலந்து கொண்டதையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக டி.எஸ். கருதுகிறார். மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல் வந்தபோதெல்லாம் தன்னுடன் கடந்தகால, நிகழ்கால அரசியல் போக்குகள் பற்றியும், கள அனுபவங்கள் பற்றியும் விவாதித்திருக்கிறார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக பிரச்சனைகள் மீது கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறை போன்றவற்றில் அவருடன் நிகழ்த்திய கலந்துரையாடல்கள் தன்னுடைய பார்வையைக் கூர்மைப்படுத்தியதாக டி.எஸ். நெகிழ்வோடு கூறினார்.
இவருக்கு சாகித்ய அகடாமி விருதைப் பெற்றுத் தந்த ‘தோல்’ நாவலில், திண்டுக்கல் வட்டாரத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக தோழர் ஏ.பி. நடத்திய போராட்டத்தைச் சித்தரித்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு களப்போராட்டத்தையும் அதன் அரசியல்-சமூகப் பின்னணியையும் அற்புதமான இலக்கியமாக்கியுள்ள நாவல் அது.
‘மலரும் சருகும்’, ‘தேநீர்’, ‘தோல்’ ஆகிய நாவல்களோடு பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் ஆக்கியளித்துள்ளார் டி.எஸ். ‘செம்மலர்’ ஏட்டில் எழுதிவந்த படைப்பாளிகள் சந்தித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை (இன்று அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) உருவாக்கினார்கள். அவர்களில் இவரும் ஒருவர். இப்போதும் தமுஎகசவின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.
மூணாறு பகுதியில் பள்ளிக்கல்வி கற்ற டி.எஸ். மலையாளத்தில் எழுதவும், பேசவும் தேர்ச்சி பெற்றவர். இப்போதும் அஞ்சல் வழியாக மலையாள வார இதழ் சிந்தாவை பெற்று படிக்கிறார். மேலும் ‘தேசாபிமானி’ இணையதளம் வழியாகவும் படித்துவருவதாக கூறினார். இவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாட்டில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பாராட்டினார். கேரளத்திலும் இவருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. இவருடைய திருமணம் சாதிமறுப்புத் திருமணம். பெரியகுளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முழுநேர ஊழியராக இருந்த தோழரின் மகள் பாரத புத்திரியை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் பெரியகுளத்தைச் சார்ந்த கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்துல் ரசாக். (மறைந்த தோழர் ரசாக்கையும் ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் நாம் சந்தித்திருக்கிறோம்.)
டி.எஸ்., பாரத புத்திரி தம்பதிகளுக்கு சித்தார்த்தன் பிரபு, சார்வாகன் பிரபு என்ற இரண்டு மகன்களும், தேவஞான லெட்சுமி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் கணினிப் பொறியாளராக இருக்கிறார். அடுத்த மகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர். வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். மூத்த மகனும் மகளும், பாரத புத்திரியும் கட்சி ஆதரவாளர்கள். ஆம் டி.எஸ். குடும்பம் கட்சிக் குடும்பம். வழக்குரைஞர் தொழிலும் எழுத்துப் பணியும் தொடர்ந்து வெற்றிகரமாக அமைந்ததில் தனது இணையரின் துணையிருப்பும் ஒத்துழைப்பும் மிக முக்கியமான காரணம் என உணர்வுப் பெருக்குடன் டி.எஸ். கூறினார். தனது வீட்டில் உள்ள நூலகத்திற்கு டி.எஸ் என்னை அழைத்துச் சென்றார். வாசிப்பதும், எழுதுவதும் அவருக்கு சுவாசம் போன்றது. அவரது பரந்த வாசிப்புதான் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களை உற்றுக் கவனித்து இலக்கியமாக்கித் தருகிற டி.எஸ். தற்போது ஆற்று மணல் கொள்ளை, இயற்கை வளச் சுரண்டல், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்குலைவு, அதன் பின்னணியில் உள்ள கூட்டுக்களவுக் கும்பல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிற புதிய நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அச்சில் உள்ள அந்த ‘அடுக்கம்’ என்ற நாவல் விரைவில் நம் கைகளுக்கு வரவுள்ளது. இதனிடையே நெல்லைக்குச் சென்று புனித சேவியர் கல்லூரியில் விவசாயிகள் பிரச்சனைகள், போராட்டம் சம்பந்தமாக ஆவணங்களை நகலெடுத்து வந்திருக்கிறார் - அடுத்த நூலுக்கான தயாரிப்புக்காக!
தோழர் டி.எஸ்.சுக்கு தற்போது வயது 84. உடல் தளர்ந்துள்ளது. சிந்தனை தளரவில்லை. தொடர்ந்து எழுத வேண்டுமென்றும், தனது படைப்புகள் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பயன்பட வேண்டுமென்ற வேட்கையோடு படிக்கிறார், எழுதுகிறார். கல்லூரி நாட்கள் தொடங்கி இதுவரையில் ஒரு முன்னணி வழக்குரைஞராக, முன்னோடி இலக்கியவாதியாக கம்யூனிஸ்ட் இயக்க களத்தில் இயங்கிடும் தோழர் டி.எஸ். அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.
சிறையில் பிறந்த பாரதபுத்திரி
தோழர் டி.எஸ்.சை அவர் இல்லத்தில் சந்தித்த போது அவருடைய துணைவி யாரும் இருந்தார். அவருடைய பெயர் வித்தியாச மாக இருப்பது பற்றிக் கேட்டபோது, அகமும் முகமும் மலரப் பேசினார் பாரத புத்திரி, “என்னு டைய அம்மா அப்பா இரண்டு பேருமே கம்யூ னிஸ்ட்டுகள். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார்கள். நாடு விடு தலை பெற்ற 1947, ஆகஸ்ட் 15ம் தேதியன்று நான் சிறையிலேயே பிறந்தேன். இதனால் என்னு டைய பெற்றோர்கள் எனக்கு பாரத புத்திரி என்று பெயர் சூட்டினார்கள். தோழர் அப்துல் ரசாக் ஒரு வழக்கிற்காக சென்னை சென்ற போது வழக்கறிஞர் டி.எஸ்-சை சந்தித்திருக்கிறார். என்னுடைய தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேர ஊழி யர். டி.எஸ். கம்யூனிஸ்ட் வழக்கறிஞர். டி.எஸ்-சோடு தோழர் அப்துல்ரசாக் பேசி அதற்குப் பிறகு, என்னுடனும், எனது தந்தையுடனும் பேசி எனக்கும், டி.எஸ்-சிற்கும் பெரியகுளத்தில் சாதி மறுப்பு சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என கூறினார்.