ஆதித்யநாத் ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும் குற்றச்சாட்டு
லக்னோ, ஜூலை 21 - உத்தரப் பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராக இருந்தபோதும் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலித் என்பதால் அதிகாரிகள் உட்பட யாரும் தன்னை கொஞ்ச மும் மதிப்பதில்லை. இவ்வாறு அதிகாரமற்ற ஒரு பொம்மை அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று பரபரப்பான பேட்டி ஒன்றையும் தினேஷ் காதிக் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதன்மூலம் 37 ஆண்டு களுக்கு பின் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த அரசியல் கட்சி என்ற சாதனையை பாஜக செய்திருப்ப தாக அந்தக் கட்சியினர் இப்போது வரை விடாமல் ஊடகங்களில் முழங்கி வந்தனர். இந்நிலையில்தான் ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலை யில், உத்தரப் பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் கத்திக் (45), தனது அமை ச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உ.பி.யின் மீரட் மாவட்டம் அஸ்தினாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான தினேஷ் கத்திக் (45), தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘‘என் நிர்வாகத்தின் கீழ் உள்ள நமாமி கங்கா திட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்காக பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர். இது குறித்து நான் பிறப்பித்த உத்தரவுகள் அமல் படுத்தப்படவில்லை. இந்த விவரங்களைக் கேட்க நான் முதன்மைச் செயலாளர் அனில் கர்கிற்கு போன் செய்து பேசினேன். அவர் விளக்கம் அளிக்காததுடன், பாதியில் இணைப்பை துண்டித்தார். நான் தலித் என்பதால் உயரதிகாரிகள் மதிப்பதில்லை, அரசு கூட்டங்களுக்கும் அழைக்காமல் புறக்கணிக் கின்றனர். எனவே, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது புகார்கள் மீது நீங்கள் எந்த அமைப்பின் சார்பில் வேண்டுமானாலும் விசாரணை நடத்தி உண்மையை அறியலாம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும் தினேஷ் கத்திக், தனது ராஜினாமா குறித்து ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில், “நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கியக் கூட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படுவது இல்லை. தனக்கென்று எந்தப் பணிகளும் கொடுக்கப்படுவதில்லை. தான் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் எந்த அதிகாரிகளும் செவி சாய்ப்பது இல்லை. தொலைபேசியில் பேசினால் கூட முதன்மைச் செயலாளர் அதைக் கேட்பதில்லை. அமைச்சர் என்பதால் தனக்கு ஒரு கார் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் நான் ஓரங்கட்டப்படுகிறேன். ஒரு மாநில அமைச்சராக தனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அமைச்சராக பணியாற்றுவதால், தலித் சமு தாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயல். இத னாலேயே நான் ராஜினாமா செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். அண்மையில் உ.பி. பாஜக ஆட்சியில் பொதுப் பணித்துறையில் நடைபெற்ற அதிகாரி கள் இடமாற்றத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பொதுப்பணித் துறை அமைச்சர் ஜிதின் பிரசாதா பெயரைக் குறிப்பிட்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், நீர்வளத்துறை இடமாற்றத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அந்த துறையின் அமைச்சரான தினேஷ் கத்திக்கே குற்றச்சாட்டு எழுப்பியிருப்பது உ.பி. அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் கத்திக் ராஜினாமா செய்துள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி யோரை சந்திப்பதற்காக உ.பி. மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதா தில்லியில் முகாமிட்டுள்ளார்.