states

img

பீகார், உ.பி., ஒடிசா-வில் வெயிலுக்கு 118 பேர் பலி

லக்னோ, ஜூன் 18- இந்தியாவில் கோடை வெயில் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் கடுமையான வெப்பம் காரணமாக குறைந்தது 98 பேர் இறந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும் பீகாரில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 பேர் ஜூன் 15,16, 17 தேதிகளில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  கடந்த மூன்று நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுடன் பாலியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் குறைந்தது 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.   தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறுகையில், பாலியா மாவட்டம் கடுமையான வெப்பத்தில் தத்தளித்து வருகிறது. மக்கள் பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தீவிர வெப்பம் காரணமாக அவர்களின் நிலைமை மோசமடைந்தது. பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்டது என்றார். நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க மருத்துவமனையில் மின்விசிறிகள், குளிரூட்டிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளின் வருகையால் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார். ஒடிசா மாநிலம் வெப்பத்தில் தத்தளித்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் வெப்பத்தால் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.