states

img

மகாராஷ்டிரா:  ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள சைகான் கிராமத்திற்கு அருகே இன்று காலை 10.30 மணியளவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், 5 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர்  உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரவி கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்பாஜோகையில் உள்ள ராடி கிராமத்திற்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். சைகான் அருகே எதிர்த்திசையில் இருந்த வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அம்பஜோகை நகரில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, 5 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்றார்.