பெங்களூரு, மார்ச் 20 - பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் திறந்து வைத்த பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலை, ஆறே நாட்களில் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. மும்பை - தில்லி இடையேயான விரைவுச்சாலையைத் தொடர்ந்து, பெங்களூரு - மைசூர் இடையே ரூ. 8,480 கோடி செலவில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த மார்ச் 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் ராமநகரா மாவட்டத்தைக் கடக்கும் பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையானது, மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலையில் அண்டர்பாஸ் அமைந்துள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி, வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்த படி சென்றுள்ளன. இதனால் எக்ஸ்பிரஸ் சாலையே போக்குவரத்து நெரிச லால் திணறியுள்ளது. விபத்துக்களும் நடந்துள்ளன.
மொத்தம் 118 கி.மீ. தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலை யின் மூலம் பெங்களூரு - மைசூரு இடையேயான பயணம் நேரத்தை வெறும் 75 நிமிடங்களாக குறைத்து விட்டதாக திறப்பு விழாவையொட்டி மோடிஅரசு ஜம்பம் அடித்திருந்தது. ஆனால், அவசர கோலத்தில் திறக்கப்பட்ட சாலையில், மழைநீர் தேங்கி பயணம் நேரம் பல மணிநேரங்களாக மாறியது. இது வாகன ஓட்டிகளை துயரத்தில் ஆழ்த்தியது. “கடந்த ஆண்டில் இதே ராமநகரா மாவட்டத்தில் பழைய நெடுஞ்சாலையின் பல்வேறு அண்டர் பாஸ்களில் குளம்போல மழைநீர் தேங்கி இருந்தன. புதிய நெடுஞ்சாலையிலாவது இவ்வாறு நடக்காது என நினைத்தோம், ஆனால் எந்த மாற்றமும் இல்லை” என பெங்களுரு - மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி யுள்ளனர். ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முறையான ஆய்வுகளை நடத்தித்தான் இந்த சாலையை அமைத்தார்களா..? புதிய தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்தவில்லையா.. என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலையில் பயணம்செய்த வாகன ஓட்டி ஒருவர் அளித்த பேட்டியில், “எனது மாருதி ஸ்விப்ட் கார், வெள்ளம் தேங்கிய அண்டர் பிரிட்ஜில் பாதியளவு மூழ்கிவிட்டது. இதனால் கார் ஆப் ஆனது, பின்னால் வந்த லாரி ஒன்று என் கார் மீது மோதியது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனது காரை சரிசெய்து தருமாறு கர்நாடக முதல்வர் பொம்மையிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.