states

img

முட்டுக்கட்டையை நீக்கிட அரசு முன்வரும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் - அகில இந்திய விவசாயிகள் சங்கம்

போராட்டத்தைத் தொடர விவசாயிகள் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முட்டுக்கட்டையை நீக்கிட மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அதுவரையிலும் போராட்டம் தொடரும் என்றும்  அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வீடியோ மூலம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா மற்றும் நிர்வாகிகள் விஜு கிருஷ்ணன், கிருஷ்ணபிரசாத், கே.கே.ராகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகள், தில்லியில்  போராடும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவின்மீது, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்று உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரை வீரத்துடன் எதிர்கொண்டு, திறந்தவெளியில், இரவும் பகலும் உட்கார்ந்துகொண்டிருக்கும் கொடுமையான நிலைமையை மனிதாபிமானமான முறையில் பரிசீலனை செய்து, உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தையும், விவசாயிகளையும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்த அனுமதித்திருக்க வேண்டும் என்றும், அதன்மூலம் பிரச்சனையைத் தீர்த்திட முயற்சித்திருக்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருதுகிறது. 

நரேந்திர மோடி அரசாங்கம், விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கும் மேலாக,  கார்ப்பரேட்-பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களையே உயர்த்திப்பிடிப்பதில் பிடிவாதமாக இருப்பதால், உச்சநீதிமன்றம் இந்த முட்டுக்கட்டையைச் சரிசெய்திட இது ஓர் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தது.

1995இலிருந்தே விவசாயப் போராட்டங்களும், வேளாண் நெருக்கடிகளும் நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இதற்கு முன்பும் விவசாய சங்கங்கள் கொண்டுவந்தன., எனினும் விவசாய இயக்கத்தின் அனுபவம் என்ன வெனில், இதுபற்றியெல்லாம் நீதிமன்றம் கவலைப்பட்டு, நீதி வழங்க முன்வராமல் இருந்தது என்பதேயாகும். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றமானது, இது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடு என்றும், இதில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் கூறி எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்காமல், வழக்கை முடித்து வைத்துவிட்டது.  

விவசாயிகள் தற்கொலை வழக்கும்கூட உச்சநீதிமன்றத்தில் 2014இலிருந்து நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், இரண்டு லட்சம் விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றமானது இது தொடர்பாக முடிவெடுப்பதும் ஆட்சியாளர்களின் தனி உரிமை என்றும் எனவே இதிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறிவிட்டது.

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் 2020 செப்டம்பரிலிருந்தே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை தொடர்பாக இதுவரை எந்த விசாரணை தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை. இவற்றின்மீது இடைக்கால உத்தரவும் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. விவசாயிகளின் உடனடிக் கோரிக்கைகள் குறித்து எதுவும் கூறாது உச்சநீதிமன்றம்  அமர்ந்துகொண்டிருக்கிறது.

உண்மையில், மத்திய அரசாங்கம், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் எதையும் பின்பற்றாது மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தது. இவை தொடர்பாக நாடாளுமன்றக் குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.  விவசாய அமைப்புகள் எதனுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்திடவில்லை. அரசமைப்புச் சட்டத்தின்கீழ் விவசாயம் என்பது மாநில அரசாங்கங்களின் பட்டியலில் உள்ளபோதும், மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகமும் மாநிலப்பட்டியலிலேயே உள்ளபோதும், ம்த்திய அரசு மாநில அரசுகள் எதனுடனும் கலந்தாலோசனையும் செய்திடவில்லை. உச்சநீதிமன்றம், இவற்றின் சட்டபூர்வமான செல்லுபடியாகும் தன்மை குறித்தும், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இந்த 3 வேளாண் சட்டங்களும் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்றும், சட்டவிரோதமானது என்றும் அறிவித்து அடித்து வீழ்த்திட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்துள்ள மனுவின்மீதும் தீர்மானித்திட வேண்டியிருக்கிறது.  

இந்தப் பிரச்சனை மீது அரசாங்கமே தீர்மானிக்க வேண்டிய தேவை இருப்பதால், இப்பிரச்சனையில் தலையிடுவதற்காக விவசாய சங்கங்களில் எந்த அமைப்பும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரவில்லை. கிளர்ச்சிப் போராட்டங்களை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போதே,  பிரச்சனையைத் தீர்த்துவைக்க குழு அமைக்கலாம் என்று கூறிய யோசனையை விவசாய சங்கங்கள் நிராகரித்துவிட்டன. மோடி அரசாங்கத்தால், கார்ப்பரேட்டுகள் ஆதரவு மற்றும் விவசாயிகள் விரோதமான இந்த வேளாண் சட்டங்கள் மூன்றும் ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க அமைக்கப்படும் எந்தவொரு குழுவும் பொருத்தமான ஒன்றாக அமைந்திட முடியும் என்றே அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருதுகிறது.  

விவசாய சங்கங்களுடனும், மாநில அரசாங்கங்களுடனும் மிகவும் விரிவான அளவில் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது மத்திய அரசாங்கம்தான். எனினும், உச்சநீதிமன்றத்தால் கருதப்பட்டபடி, மத்திய அரசாங்கம் தன் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறது.

எனவே, மூன்று வேளாண் சட்டங்களும், மின்சார (திருத்தச்)சட்டமுன்வடிவு, 2020ம் அரசாங்கத்தால் ரத்து செய்யப்படும்வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.

இவ்வாறு ஹன்னன்முல்லா மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட வினாக்களுக்கு, நிர்வாகிகள் பதிலளித்தார்கள்.

(ந.நி.)