ஜிஎஸ்டி குழு பரிந்துரை மாநில அரசினை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
குஜராத் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி தொடர்பான சில சந்தேகங்கள் குறித்து அம் மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ``ஜிஎஸ்டி குழுவின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதேயன்றி மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல'' என்று தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவத்து ஜிஎஸ்டி குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ``இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. இந்தியா கூட்டாட்சித் தத்துவ நாடு என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு.
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்'' நீதிமன்றம் தெரிவித்துள்ளது.