states

img

பீகாருக்கு 37,000 கோடி, ஆந்திராவுக்கு 15 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு பூஜ்யம்!

புதுதில்லி, ஜூலை 23 - 2024-25ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 10.44 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வந்தார். தொடர்ந்து, 11.04 மணிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை,  தாக்கல் செய்து உரையாற்றினார்.

“ஒன்றிய அரசின் மீது மக்கள்  நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக ஆட்சியில் அமர்த்தி யுள்ளனர். உலகம் முழுவதும் பொரு ளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் குறை வாகவே இருந்து வருகிறது” என்று  கூறி பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர், பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்டார். (விபரம் : பக்கம் 2)

எனினும், இந்தியா முழுமைக்கு மான பட்ஜெட் என்பதைத் தாண்டி,  தங்களின் ஆட்சி தொடருவதற்கு காரணமான சந்திரபாபு நாயுடுவை யும், நிதிஷ் குமாரையும் திருப்தி படுத்தும் வகையில், ஆந்திரம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் ஏராளமான திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை அள்ளி வீசினார்.

பீகாரில் சாலைகள், மேம்பாலம் அமைக்க ரூ. 26 ஆயிரம் கோடி வழங்கப்படும்; வெள்ளப் பாதிப்பைத் தடுக்க ரூ. 11  ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் படும்; பீகாரில் விமான நிலையங் கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்; ஆந்திரத் தலை நகர் அமராவதியை உருவாக்க ரூ. 15 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்; ஆந்திரப்பிர தேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். ஆந்திரத்தில் பின்தங்கிய மாவட்டங் களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆந்திரத்தில் சாலை மேம்பாடு, நீர்த் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று அடுக்கினார்.

அதேநேரம், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் - மோடி அரசும் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். 

ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை மறந்தும்  கூட உச்சரிக்கவில்லை. ஆந்தி ரத்திற்கும், பீகாருக்கும் அள்ளிக் கொடுத்திருப்பவர்கள், தமிழ்நாட்டி ற்கு ஒரு பைசா-வைக் கூட பட்ஜெட் டில் ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங் களும் மட்டுமன்றி, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

3 ஆண்டுகளாக விடுவிக்கப் படாமல் இருக்கும் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து அறி விக்கவில்லை. கோவை மற்றும்  மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டம் உட்பட தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு க்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

வழக்கமாக பட்ஜெட் உரையில் இடம்பெறும் திருக்குறள், சங்க  இலக்கிய மேற்கோள் கூட பட்ஜெட்டில் இம்முறை இடம்பெற வில்லை. 

இவ்வாறு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், தமிழ்நாடு  முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக் கிறது. மோடி அரசின் வஞ்சகத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகளை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

“வரலாற்றிலேயே முதன்முத லாக ஒன்றிய நிதியமைச்சர், பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்” என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜான் பிரிட்டாஸ் சாடி யுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கான அறிவிப்புக்கள் மட்டுமல்ல; திருக்குறளையும் கூட மோடி அரசு புறக்கணித்துள்ளதாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு எம்.பியான சு. வெங்கடேசன் சாடியுள்ளார். (முழு விபரம் : பக்கம் 5)

“நாங்கள் ஆந்திரா மற்றும் பீகாருக்கு எதிரானவர்கள் அல்ல,  ஆனால் இந்தியா பல மாநிலங் களைக் கொண்ட நாடு மற்றும் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். ஒன்றிய அரசு முழு பட்ஜெட்டையும் மறுசீரமைக்க வேண்டும்” என்று சிபிஐ எம்.பி சந்தோஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

“ஒன்றிய அரசு மாநிலங்க ளையும் பாரபட்சமின்றி பார்க்க வேண்டும். ஆனால், பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது” என்று திமுக மாநி லங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கண்டனம் செய்துள்ளார்.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் உட்பட தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களை அறிவிக்காத ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

“பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை ஒன்றிய நிதி யமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

“நீண்டகாலமாக அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று எழுப்பப்பட்ட கண்டன குரலுக்கு எந்த வகையிலும் ஒன்றிய அரசு செவி மடுக்கவில்லை. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி  ஒதுக்குவது கூட்டாட்சி தத்து வத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்” என்று காங்கிரஸ்  மாநிலத் தலைவர் கு. செல்வப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத, நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத படுமோசமான பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்துள்ளதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு எதிராக கட்சி அணிகள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல்  தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் வேலையின்மை மிகவும் உச்ச அளவில் இருக்கக்கூடிய பொருளாதார நிலைமை, பணவீக்க விகித உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, தனியார் முதலீடுகளின் மந்த நிலை ஆகியவற்றுக்கு இடையில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டானது அவற்றைச் சரிசெய்யக் கூடிய விதத்தில்  தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்திட கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. மாறாக, அது தாக்கல் செய்துள்ள முன்மொழிவுகள், பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. இது மக்கள் மீது மேலும் துன்ப துயரங்களைத் திணிப்பதற்கே இட்டுச்செல்லும். முதலீடுகள்  மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை யும் குறைத்திடும்.

நிதி மூலதனத்தைத்  திருப்திப்படுத்த முயற்சி

பட்ஜெட்டில் உள்ள விவரங்கள், அரசின் வருவாய் வருமானம் 14.5 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், செலவினங்கள் வெறும் 5.94 விழுக்காடு அளவிற்கே அதிகரித்திருக்கிறது என்றும் காட்டுகின்றன. அரசின் வருவாய் வருமானத்தை, தன்னுடைய பொருளாதார நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம்,  சர்வதேச நிதி மூலதனத்தைத் திருப்திப்படுத்து வதற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யை 5.8 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காட்டிற்குக் குறைப்பதன் மூலம், தன்னுடைய நிதிப் பற்றாக்குறை(fiscal deficit)யைக் குறைத்திட பயன்படுத்தி இருக்கிறது.

ஜிடிபி கணக்குகளில் மீண்டும் தரவு மோசடி

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள ஜிடிபி கணக்குகள் தரவு மோசடியில் மற்றுமொரு தகிடுதத்தமாகும். பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சி 10.5 விழுக்காடாக இருக்கும் என 
கணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான ஜிடிபியானது 6.5 முதல் 7 விழுக்காடு வரை வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டி ருக்கிறது. இது 9.4 விழுக்காடு என்ற உயர் உணவுப் பணவீக்க விகிதத்தைத் தவிர்த்து, பெயரளவிலான வளர்ச்சியை 3 விழுக்காடு ‘கோர்’ பணவீக்க விகிதத்தால் பணமதிப்பீடு செய்வதன் மூலம் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம், உணவு மானியங்கள் வெட்டிக் குறைப்பு

அரசின் செலவினத்தை மேலும் கசக்கிப் பிழிந்திருப்பதன் மூலம், மானியங்கள் கணிசமான அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. ரசாயன உர மானியம் 24 ஆயிரத்து 894 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. உணவு மானியம் 7 ஆயிரத்து 082 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி முதலானவற்றிற்கான ஒதுக்கீட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டின் அளவில் கிட்டத்தட்ட எவ்வித மாற்றமும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) புறக்கணிக்கப்படுவது மேலும் தொடருகிறது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 86 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதுசென்ற 2023 நிதியாண்டில் செலவுசெய்த தொகையைக் காட்டிலும் குறைவாகும். இந்த நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் ஏற்கனவே 41 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. மீதம் உள்ள எட்டு மாதங்களுக்கு செலவு செய்வதற்காக இருக்கும் தொகை என்பது 44 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமேயாகும். நிச்சயமாக இது போதாது. இது கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை நெருக்கடியை ஆழமாக்கிடும் என்பதிலும் ஐயமில்லை.

இளைஞர்களின் பெயரில் முதலாளிகளுக்கே சலுகை

இந்த பட்ஜெட்டானது வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குகிறோம் என்ற பெயரில் சில வித்தைகளைச் செய்துகாட்டி இருக்கிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive) என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்கீழ், ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும்  முறையான துறையில் (formal sector), புதிதாக சேரும் தொழிலாளருக்கு ஒரு மாத ஊதியம் அளிக்கப்படும். தகுதியுள்ள தொழிலாளர்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் மூன்று மாதாந்திர தவணைகளில் பெறுவார்கள். எனினும், வேலை அளிக்கும் முதலாளிக்கோ, ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் மாதாந்திர ஊதியம் அளிக்கப்படுவதற்காக வாடகைக்கு அமர்த்தப்படும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்காகவும் தலா 72 ஆயிரம் ரூபாய் 24 மாதங்களுக்குத் தவணைகளாகப் பெறுவார். இவ்வாறு அவர் உருவாக்கிடும் ஒவ்வொரு கூடுதல் வேலைக்கும் பொருந்தும். உண்மையில் இந்தத் திட்டம் என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு மானியம் அளிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய வித்தைகள் எல்லாம் வேலைவாய்ப்பை உருவாக்காது. கடந்த காலங்களில் கார்ப்பரேட் துறையினர் பெற்றிடும் கொள்ளை லாபங்கள் மூலமாக அவர்கள் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவில்லை. பொருளாதாரத்தில் தேவை இல்லாத காரணத்தால் புதிதாக இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான முதலீடுகளை அவர்கள் செய்திடவில்லை. மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி சுருங்கிவிட்டதே இதற்குக் காரணமாகும்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு எனும் ஏமாற்று வேலை

பட்ஜெட்டில், இந்திய இளைஞர்கள் மத்தியில் திறமைகளை அதிகப்படுத்துவதற்காக சில திட்டங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இதுவும் நாட்டில் மிகவும் உயரளவில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிட உதவிடாது. 2016-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட 6 ஆண்டு காலத்தில் நாட்டிலுள்ள இளைஞர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே இவ்வாறான பயிற்சி நிறுவனங்களில் திறன் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நிலைமை விரிவடையாமல் வேலைவாய்ப்புகளை அதிகரித்திட முடியாது என்று மீண்டும் கூறிக்கொள்கிறோம்.

பேச்சளவிலேயே கூட்டுறவு கூட்டாட்சி

‘கூட்டுறவு கூட்டாட்சி முறை’ (‘cooperative federalism’) என்று வாய்கிழியப் பேசப்பட்டாலும், ஆந்திரம் மற்றும் பீகார் தவிர மற்ற மாநில அரசாங்கங்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகிறது. அங்கே அவர்களுக்கிருக்கின்ற அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அவை தப்பித்துள்ளன. ஒன்றிய ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி உயிர்பிழைத்திருப்பதற்கு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவு தேவை. எனவே, நிதி ஆணையம் மானியங்கள் (வரிப் பகிர்வு தவிர), 2022-23இல் 1 லட்சத்து 72 ஆயிரத்து 760 கோடியிலிருந்து 2023-24க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 429 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் அது மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 378 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

பணக்காரர்கள் மேலும் கொழுக்க ஓட்டாண்டிகளாகும் ஏழைகள்..

ஒட்டுமொத்தத்தில், இந்த பட்ஜெட் பணக்காரர்களை மேலும் கொழுக்க வைத்திடும் விதத்திலும், ஏழைகளை மேலும் ஓட்டாண்டிகளாக்கிடும் விதத்திலும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது, செல்வ வரி (wealth tax) அல்லது பாரம்பரிய வரி (inheritance tax) போன்றவற்றை நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள் மீது விதித்திட எவ்வித முன்மொழிவையும் பரிசீலனை செய்திட மறுத்திருக்கிறது. சாமானிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரிச்சுமையிலிருந்து அவர்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் அளித்திடவில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தோ, நாட்டின் பொருளாதாரம் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்தப் பட்ஜெட்டின் தோல்விக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு அனைத்துக் கட்சிக் கிளைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  (ந.நி.)