states

img

மக்களவைத் தேர்தல் : பீகாரில் கூட்டணிக்கு திணறும் பாஜக

பீகார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி  சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.இதனால் 2024  லோக் சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க போவது உறுதியாகி உள்ளது. இந்த சூழல் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.தற்போது ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸின், லோக் ஜனசக்தி கட்சி மட்டுமே பீகாரில் பாஜக  கூட்டணி கட்சியாக உள்ளது.  அதனால் கூட்டணியை வலுப்படுத்தி மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 30இல் பாஜகவும் மீத 10 இடங்களை கூட்டணிக்கும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மகாபந்தன் கூட்டணியில் இருந்து இந்துஸ்தானி ஆவான் மோர்ச்சா கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சின் மகன் சந்தோஷ் குமார் சுமன், நிதிஷ் குமார் அமைச்சரவையில் இருந்து  தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இருந்தும் கூட்டணி தொடர்கிறது என்றும் பாஜகவில் சேரும் முடிவு இல்லையென்றும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டம்  ஜூன் 23 அன்று பீகாரில் நடைபெற இருக்கிறது.எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்பாகவே  இந்துஸ்தான் ஆவான் மோர்ச்சா மற்றும் சில மாநில கட்சிகளை  கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது.இதற்காக ஜிதன் ராம் மஞ்சிக்கு வடகிழக்கு மாநிலத்தில் ஆளுநர் பதவியும் அவர் மகன் சந்தோஷ் குமார் சுமனிற்கு கயா தொகுதியை ஒதுக்குவதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது.(மஞ்சி தொடர்ந்து கூட்டணி மாறிவருபவர். கடந்த ஏப்ரல் மாதம் இவர் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்தது கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது) மாநில பாஜக தலைவரும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்துஸ்தானி ஆவான் மோர்ச்சாவை வரவேற்பதாக கூறியுள்ளார். ராமனும் ராமாயணமும் கற்பனை. அது வரலாறு அல்ல என  பாஜகவின் இந்துத்துவத்தை கடந்த மாதம் ஜிதன் ராம் மஞ்சி கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் தேர்தல் வெற்றிக்காக அதை மறந்துவிட்டு தற்போது கூட்டணிக்காக பாஜக பல்வேறு வகையில் அவருடன் பேரம் பேசிவருகிறது.