நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர்.
கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபாவிலிருந்து டமாக் நோக்கி பேருந்து ஒன்று இன்று காலை 7 மணியளவில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைபாங்கான சாலையிலிருந்து சறுக்கி சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரை விமானம் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து துணை காவல் ஆய்வாளர் லால் த்வாஜ் சுபேதி கூறுகையில், அதிவேகமாக பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 5 பேரை செயின்பூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைதொடர்ந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.