states

img

இந்தியா கண்டறிந்துள்ள லித்தியம் தாதுக் குவியல் பயன் தருமா? - பேரா. பொ.இராஜமாணிக்கம்

பிப்ரவரி 09,2023 ல் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India) ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரியாசி மாவட்டத்தில்,சலால்-ஹைமனா பகுதியில்59 லட்சம் டன்  லித்தியம் தனிமம்கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான குவியல் என்பதில் எந்தவிதமானசந்தேகமும் இல்லை. பொலிவியாவில் 2கோடி டன், சிலியில் 90 லட்சம் டன்,ஆஸ்த்ரேலியாவில் 73 லட்சம் டன், சீனாவில் 50லட்சம் டன், அர்ஜெண்டினாவில் 20லட்சம் டன் என இந்த நாடுகளுக்குஈடாக அதிக அளவு லித்தியம் இருப்புஉண்மையிலேயே மகிழ்ச்சி தரும் செய்தி தான்.  இந்தக் கண்டுபிடிப்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 1999ல் கூட அறிவிக்கப்பட்டது.மேலும் இதுபோன்று சிறிய அளவிலான லித்தியம் இருப்பு,சுமார் 1600 டன், 2021 பிப்ரவரியில் கர்னாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. லித்தியத்தின் பயன்பாடு எல்லோரும் அறிந்ததே. தற்போது அது லித்தியம் பேட்டரிகள் செய்வதற்கு மிகவும் அவசியமான மூலப்பொருள் ஆகும். லித்தியம் பேட்டரிகள் இன்று செல்போன், ஸ்மார்ட் போன், லேப் டாப், கேமெரா,கேம்கார்ட் முதல் ட்ரோன்கள், எலெக்ட்ரிக் வாகனங்களான இரு சக்கர வாகனம்,நான்கு சக்கர வாகனம் வரை இதன் பயன்பாடு நீள்கிறது. 2030க்குள் இந்தியாவில் 13 லட்சமாக இருக்கும் மின்சார வாகனங்கள் எட்டுக் கோடி வரை  உற்பத்தியாகும் என நிதி ஆயோக் கூறுகிறது. ஒரு பட்டன் செல்கள் இயங்கும் செல்போன்  முதல் 100-200 செல்கள் கொண்ட இரு சக்கர வாகனத்திற்குத் தேவையான பேட்டரி வரை தயார் செய்யப்படுகிறது என்றால் பிற பயன்பாடுகளுக்கு இதன் எண்ணிக்கை எவ்வளவு தேவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது லித்தியம் பேட்டரிக்கான லித்தியம் மற்றும் உதிரிப் பொருட்களை பிற நாடுகளிடம் வாங்கி குறிப்பாக சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவைகளை அசெம்பிள் செய்து தற்போது இந்தியா  தயாரித்து வருகிறது. இதற்கான அந்நியச் செலாவணி மட்டும் வருடாந்திரம் 16300 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்ட லித்தியம் இருப்பு நிச்சயமாக நமக்குத் தேவையான அளவில் பயன்படுத்தப்படும் என்றாலும்,கண்டறியப்பட்டுள்ள லித்தியம் தாதுவை அவ்வளவு எளிதாகப் பிரித்தெடுத்து விட முடியாது. இந்த லித்தியம் தாது பாக்சைட் தாதுவுடன் பிணைந்து பாறைகள், கற்கள் போன்று இருப்பதால் இதனைப் பிரித்தெடுப்பதே மிகப் பெரிய சிக்கலான வழிமுறையாக இருக்கும். மேலும் லித்தியம் தாதுவை சுத்திகரிப்பு செய்தோ அல்லதுபிற தாதுக்களான கோபால்ட், நிக்கல், மேங்கனீசு, தாமிரம், கிராஃபைட் ஆகியவைகளோடு இணைத்து லித்தியம் பேட்டரி செய்வதற்கான வசதிகளும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. இதில் நிக்கல், க்ராஃபைட்,மேங்கனீசு ஆகியவற்றையும் இறக்குமதி செய்தாக வேண்டும்.

லித்தியம் குவியல் கண்டறிந்தாலும் அதை சுத்திகரிப்பு செய்யும் அளவிற்கு நடைமுறைப்படுத்த நான்கு  கட்டங்களைத் தாண்டியாக வேண்டும் எனக் கூறுகின்றனர்.  இதையெல்லாம் கடந்து லித்தியத்தை கண்ணில் பார்க்க சுமார் இருபது வருடங்கள் ஆகும் என்கிறார்கள். அவசரப்பட்டு ஒன்றும் புண்ணியமில்லை. லித்தியம் தாது கண்டறியப்பட்ட இடம் என்பது இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த நிலப் பரப்பு நில நடுக்கப் பகுதியில் நான்காம் மண்டலம் என குறியிடப்பட்டுள்ளது. அதாவது ரிக்டர் அளவுகோளில் 8 எண்ணாக நில நடுக்கம் உருவாகும் என்கிறார்கள். மேலும் காடுகளும் வன விலங்குகளும் வாழும் பகுதியாகும். விவசாய நிலங்களும், வாழ்வாதாரம் தரும் இயற்கை வளமிக்க பல கிளைகள் கொண்ட செனாப் நதியும் இந்தப் பகுதியில் தான் செல்கிறது. இதனால் லித்தியம் பிரித்தெடுப்பு மிகப் பெரிய சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். 

கூடவே ஒரு டன் லித்தியம் உருவாக்குவதற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பிற்குத் தேவைப்படும் என்பதால் இது மிகப் பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்கும். இறுதியாக தீவிரவாதமும் ராணுவ நடவடிக்கைகளும் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். லித்தியம் தனிமத்தை இந்திய அரசு பிரித்தெடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்;இது இப்பகுதியின் மக்கள் சொத்து என ஒரு தீவிரவாதக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.  இத்தனையும் தாண்டி லித்தியம் பிரித்தெடுக்க முயன்றால் இறக்குமதி செய்வதை விட 5-7 சதவீத வரையிலேயே பயன்  கிடைக்கும் என்கிறார்கள்.  பசுமை ஆற்றல் பயன்பாட்டிற்கு முன்னுரிமை கொடுப்போம் என்றும்  2070க்குள் பூஜ்ஜிய கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீட்டைக் குறைப்போம் என்றும்  மோடி அவர்கள் சூளுரைப்பது மேற்சொன்ன பிரச்சனைகளைக் கணக்கில் கொள்ளுமா? அல்லது வழக்கம் போல் அதிகாரப் போக்குடன் உடனடியாகச் செயல்படுத்த முயலுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.