states

img

இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி

புதுதில்லி, மார்ச் 29-  மார்ச் 28-29 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தை மாபெரும் அளவில் வெற்றிகரமாக்கிய உழைக்கும் மக்களுக்கு சிஐடியு தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது என்று சிஐடியுவின் பொதுச் செயலாளர் தபன் சென் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 மார்ச் 28-29 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான துறைவாரி சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதற்கு, இந்தியத் தொழிற்சங்க மையத்தின் ( சிஐடியு) சார்பில் செவ்வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளனர். பல லட்சக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, ஒன்றிய அரசாங்கத்தின் தேச விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராகவும் நடைபெற்ற ஒன்றாகும்.

மிரட்டலுக்கு அஞ்சாமல் பங்கேற்பு

இவ்வேலை நிறுத்தம் பல மாநிலங்களில், குறிப்பாக கேரளாவிலும், திரிபுராவிலும் மற்றும் தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், அசாம் முதலான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்தும் தனியார் போக்குவரத்தும் பங்கேற்றதன் காரணமாக, ‘பந்த்’ போன்று மாறியது. பல இடங்களில் சாலை-ரயில் முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பெரிய தொழிற்சாலைகள் உள்ள மையங்களில் வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. ‘எஸ்மா’ பாயும் என்றும், ‘எட்டு நாள் ஊதியம் வெட்டப்படும்’ போன்று எண்ணற்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டபோதிலும், அவற்றைத் துச்சமெனத் தூக்கியெறிந்து, உழைக்கும் மக்கள் மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பளித்து, நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றிட முன்வந்துள்ளனர். பல மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள தகவல்களின்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், தில்லி, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள பெரிய தொழிற்சாலை மையங்களில் வேலை நிறுத்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்திலும், பாரதீப் துறைமுகத்திலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. பல இடங்களில் இது கணிசமான அளவிற்கு இருந்திருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தத்தின் காரணமாக விசாகப்பட்டினம் உருக்குத் தொழிற்சாலை, திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள பிஎச்இஎல் பொதுத்துறை நிறுவனங்கள் முடங்கிப்போயின. நிலக்கரிச் சுரங்கத் துறையின்கீழ் தெலுங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் 100 சதவீதம் வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. நாட்டில் சராசரியாக 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வேலைநிறுத்தம் நடந்துள்ளது. ‘பவர் கிரிட்’ நிறுவனத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் வட கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா, கிழக்கு பிராந்தியம் 2-இல் உள்ள ஒடிசா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்திலும் 100 சதவீதம் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. அசாம், வட கிழக்கு மாநிலங்கள், கொச்சி, மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய்/சுத்திகரிப்பு மற்றும் சமையல் எரிவாயு ஆலைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பெரிய அளவில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது.

இன்சூரன்ஸ் துறையில் வேலை நிறுத்தம் முழுமையாக நடந்துள்ளது, வங்கிகளில் பெருமளவில் நடந்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்களும் குறிப்பாக அஞ்சல், வருமான வரி மற்றும் இதர பெரிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் பெருமளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். கேரளா, ஹரியானா, பஞ்சாப், திரிபுரா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநில ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கணிசமான அளவிற்குப் பங்கேற்றுள்ளனர். பிஎஸ்என்எல் ஊழியர்களும் பெருமளவில் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். கர்நாடக மாநிலத்தில் பொம்மசந்திரா, பிடாபி, பீன்யான், ஒயிட்பீல்டு, ஹாஸ்கோட், தபஸ்பேட் போன்ற பெங்களூருத் தொழிற்சாலைப் பகுதிகளில் இயங்கிடும் தனியார் உற்பத்திப் பிரிவுகளிலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. அதே போன்றே, ஹைதராபாத் அருகில் செர்லபள்ளி தொழிற்பேட்டைப் பகுதியும் முழுமையாக மூடி இருந்தது. தெலுங்கானாவில் உள்ள சாண்ட்விக் மற்றும் தோஷிபா போன்று பன்னாட்டு நிறுவனங்களிலும் முழு வேலை நிறுத்தம் நடந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்திலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி, ஓலா மற்றும் உபேர் போன்ற சாலைப் போக்குவரத்துத் துறைகளும் செயல்படவில்லை. மகாராஷ்டிரா, ஆந்திரம், தமிழ்நாடு மற்றும் ஹரியானாவில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களும் அநேகமாக ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள், தனியார் போக்குவரத்து ஊழியர்கள் உட்பட கோடிக்கணக்கான முறைசாராத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, இரு நாட்களும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள் உட்பட 80 லட்சத்திற்கும் மேற்பட்ட திட்டப்பணி முன்னணி ஊழியர்கள் (schemed workers), இத்துறைகளை அநேகமாக முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள். கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கயிறு தொழிலாளர்கள் போன்று பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் மிகப் பெரிய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இது அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளது. இம்முற்றுகைப் போராட்டங்களில் விவசாய சங்கங்களிலும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களிலும் செயல்படும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். பல மாநிலங்களில் கிராமப்புற ஹர்த்தால் நடைபெற்றுள்ளது.

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்திட இவ்வேலைநிறுத்தம் மிகவும் அவசியம் என்பதை உணர்வுப்பூர்வமாக நன்குணர்ந்து, ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தேசவிரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற இவ்விருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மாபெரும் அளவில் வெற்றியாக்கியிருப்பதற்குத், தொழிலாளர் வர்க்கத்திற்கு வாழ்த்துக்களையும், செவ்வணக்கங்களையும் சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

(ந.நி.)