states

img

மலக்குழியில் இறங்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு கருணை காட்டவில்லை ஒன்றிய பாஜக அரசு

புதுதில்லி, பிப். 5 - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசியல் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், கையால் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்ஜெட்டில் வஞ்சித்துள்ளது. அவர்களுக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை

நிர்மலா சீதாராமனின் வாய்ஜாலம்

 “கைகளால்  செய்யப்படும் துப்புரவுப் பணி முடிவுக்குக் கொண்டுவரப்படுமென”  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். பட்ஜெட் உரையில்நிர்மலா சீதா ராமன் தனது பட்ஜெட் உரையில், “அனைத்து  நகரங்களிலும்  சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி  “மேன்ஹோலில் இருந்து மெஷின்  ஹோல் முறைக்கு (மனிதர்கள் தவிர்க்கப்பட்டு இயந்திர மயமாக்கப் படும்) மாற்றும் மாற்றப்படும்” என்றார்.  அவரது பேச்சு வெறும் வார்த்தை ஜாலம் தான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது  “சஃபாய் கரம்சாரி அந்தோலன்” அமைப்பு. “வார்த்தை ஜாலம் எங்களுக்குத் தேவையில்லை. பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உறுதியான செயல்திட்டம் தேவை. சாக்கடைகளை, செப்டிக் டேங்கு களை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவது குறித்த அவரது பேச்சியில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே உண்மை” எனக் கூறியுள்ளது  சஃபாய் கரம்சாரி அந்தோலன்  அமைப்பு. இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன், 2023-24-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் “ தலை முறை தலைமுறையாக கையால்  துப்புரவுத் தொழிலை மேற்கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர் களுக்கு எதுவும் இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தி வயர் இணைய ஏட்டிற்கு  அளித்துள்ள பேட்டியில், “சாக்கடை கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2022-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி முதல் கடந்த 264 நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  எங்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி  தினமும்  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.  சாக்கடைகள் அல்லது கழிவுநீர் தொட்டிகளில் பணியாற்றும் போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள் ளனர்.  இதை பட்ஜெட் கவனிக்கத் தவறிவிட்டது. குறிப்பாக நாங்கள் போராட்டம் தொடங்கிய நாளி லிருந்து இதுவரை  சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்கிற்குள்  பணி யாற்றிய 50-பேர் இறந்துள்ளனர். இப் பிரச்சனையில், அரசுகள் மெத்தனமாக உள்ளன.” என்றார். மேலும் அவர் கூறியதாவது: “ஒன்றிய அரசு தமது பட்ஜெட்டில்  கையால் துப்புரவுப் பணி செய்வது எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு கண்ணியமான வேலை வழங்கவேண்டும். மறு வாழ்வு அளிக்க வேண்டும்.  இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். 1993-ஆம் ஆண்டு மற்றும் 2013- ஆம் ஆண்டிலும் கையால் துப்புர வுப் பணி மேற்கொள்வது சட்ட  விரோதம் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. 2013- ஆம் ஆண்டு, நாடாளுமன்றம் கையால் துப்புரவுப் பணி செய்வதற்கான பணி  நியமனத்திற்கு தடை விதித்துள்ளது.'

அது மட்டுமல்ல 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், “கையால் மலம் அள்ளுவதை அனைத்து மாநிலங்களும் தடைசெய்ய வேண்டும். இப் பணியில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வழி வகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  2014-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை  எதுவும் மாறவில்லை.  இன்றைக்கும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள்  இறங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்றும் உலர் கழிப்பறைகள் இருக்கின்றன. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011), நாட்டில்  7,94,390 உலர் கழிப்பறை களில். மனிதர்கள் மலம் கழிக் கிறார்கள். உலர் கழிப்பறைகளில்  73 சதவீதம் கிராமப்புறங்களிலும், 27 சதவீதம்  நகர்ப்புறங்களிலும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 2019-  2022-ஆண்டுகளில் கையால்  துப்புரவு செய்வதால் யாரும் இறக்கவில்லை என்று கூறுகிற ஒன்றிய அரசு  செப்டிக்  டேங்க்குகள் மற்றும் சாக்கடை களை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் ஏற்பட்ட மர ணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுக்கவில்லை.

சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 2021-ஆம் ஆண்டு 22 பேர் இறந்துள்ளனர் என சமூக நீதி  மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.  2017ல்-93, 2018ல்-70, 2019ல்-117, 2020ல்- 19 பேர் உயிரிழந்துள்ளனர். 2022ல்- ஆம் ஆண்டு (டிசம்பர் 22-ஆம்  தேதி வரை ) 48 பேர் உயிரிழந்துள் ளனர். 1993-  2019-ஆம் ஆண்டுகளில் சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது இறந்த சுமார் 50 சத வீத தொழிலாளர்களின் குடும்பங்கள்  தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை  சட்ட தகவல்களை  மேற்கோள் காட்டியுள்ள  தி வயர்   இணையதளம்  பல நிகழ்வுகளில் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத் திற்கும் குறைவாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.