புதுதில்லி, ஜன. 10- ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். கேரளாவுக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. கே-டிஸ்க் உறுப்பினர் செயலாளர் பி.வி.உன்னிகிருஷ்ணன், பொது மேலாளர் முகமது ரியாஸ் மற்றும் கேரள டிஜிட்டல் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு - தயாரிப்பு இயக்குநர் அஜித்குமார் ஆகியோர் சிறந்த டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்புக்கான பிளாட்டினம் விருதைப் பெற்றனர். சிறந்த இணையதளத்திற்காக கோட்டயம் மாவட்ட தலைமையகத்திற்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ, மாவட்ட தகவல் அலுவலர் பீனா சிரில் பொடிப்பாரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். க்ஷீரஸ்ரீ அணுகு தளத்துக்கான (போர்ட்டல்) வெள்ளிப் பதக்கத்தை பால்வள மேம்பாட்டுத் துறையின் மின் ஆளுமை துணை இயக்குநர் ஆர்.ரஜிதா, பால்வள ஐ.டி செல் அதிகாரி மீனாகுமாரி, என்.ஐ.சி விஞ்ஞானி சிபி ஆண்டோ ஆகியோர் பெற்றனர். இந்த விருதுகள் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படுகின்றன. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.