states

ஜல்லிக்கட்டு ஒரு கலாச்சார நிகழ்வு: உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்த தமிழக அரசு

புதுதில்லி, நவ. 25 - தமிழகத்தில் பொங்கல் - தமிழர் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  இந்நிலையில், வியாழனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்த தமிழக அரசு, “ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார நிகழ்வு. பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் ஒரு சமூகத்தின் அடையாளம். இதன் மீதான தடை கலாச்சாரத்திற்கு விரோதமாகவும், சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க உரிமை உள்ளது. இந்த விளையாட்டை விலைமதிப்பற்ற உள்நாட்டு கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு எவ்வித கொள்கைகளையும் மீறவில்லை. ஜல்லிக்கட்டின் பாரம்பரியம், கலாச்சார முக்கியத்துவம் உயர்நிலைப் பள்ளி பாடப் புத்தகத்தில் கற்பிக்கப்படுகிறது. இதனால் அதன் முக்கியத்துவம் தலைமுறைகளுக்கு அப்பால் பராமரிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் 11 லட்சம் காளைகள் பங்கேற்கும் நிலையில், சில புகைப்படங்களை கொண்டு எந்தவித முன்முடிவுக்கும் வரக்கூடாது” என தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மறுபுறத்தில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ‘சட்டம் இயற்றப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காக விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.