states

img

34 முஸ்லிம்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய சமாஜ்வாதி கூட்டணி

லக்னோ, மார்ச் 15- உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக சார்பில் முஸ்லிம்கள் ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கூட்டணியில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச மாநில மக்கள் தொகையில் 28 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் ஆவார். 100-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் எண்ணிக்கையுடன் திகழ்கின்றனர். மேலும் 60 தொகுதிகளில் 20 முதல் 35 சதவிகிதம் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டிருக்கின்றனர். சராசரியாக உ.பி. மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் 10 சதவிகித வாக்குகளை வைத்திருக்கின்றனர். எனினும் வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப, சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட பாஜக நிறுத்தவில்லை. உ.பி.யை ஆளும் கட்சியில், அந்த மாநிலத்தின் 28 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவமே தரப்படவில்லை. 2022 தேர்தலிலும் இதுதான் நிலைமை. 255 இடங்களில் பாஜக வென்றிருக்கிறது.

ஆனால், இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. அவர்களை வேட்பாளராக நிறுத்தக்கூட பாஜக தயாராக இல்லை. பாஜக கூட்டணியில் இருக்கும் அப்னா தளம் (சோனேலால்) கட்சி மட்டும் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால், ராம்பூரில் அவர் தோற்றுப்போனார். இந்நிலையில், உ.பி. தேர்தலில் தற்போது வெற்றிபெற்றுள்ள 34 முஸ்லிம்களும், சமாஜ்வாதி கூட்டணியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சமாஜ்வாதி கூட்டணி 63 முஸ்லிம்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 86 முஸ்லிம்களையும், காங்கிரஸ் 60 முஸ்லிம்களையும் வேட்பாளர்களாக நிறுத்தின. எனினும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில், சமாஜ்வாதி கூட்டணியில் 34 முஸ்லிம்கள் வெற்றிபெற்றுள்ளனர்.  

மொத்தம் 63 பேர் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட நிலையில், 31 முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சியிலிருந்தும், அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியிலிருந்து (ஆர்எல்டி) 2 முஸ்லிம்களும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியிலிருந்து (எஸ்பிஎஸ்பி) ஒரு முஸ்லிம் வேட்பாளருமாக 34 பேர் சட்டமன்றத்தில் நுழைந்துள்ளனர்.  இவர்களில் 21 பேர் உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலிருந்தும், 7 பேர் கிழக்குப் பகுதியிலிருந்தும், 6 பேர் மத்தியப் பகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். முஸ்லிம்கள் அதிகமுள்ள 19 தொகுதிகளில் - முஸ்லிம்களே பலவாறாக பிரிந்து போட்டியிட்டதால் அந்த இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாதியின் முக்கியத் தலைவர் ஆசம்கான் மற்றும் நஹீத் ஹசன் (ஷாம்லி) ஆகியோர் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.