states

img

நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்பு கேட்டாக வேண்டும்!

முகம்மது நபிகளை அவதூறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுதில்லி, ஜூலை 1 - முகம்மது நபிகளையும்,  இஸ்லாமிய மதத்தையும் அவதூறாகப் பேசிய பாஜக  செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா  லால் படுகொலை உட்பட நாடே இன்று பற்றி  எரியும் சூழல் ஏற்பட்டிருப்பதற்கு நூபுர் சர்மா வின் பொறுப்பற்ற பேச்சே காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், நூபுர் சர்மாவை தில்லி காவல்துறை இன்னும் கைது  செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி யுள்ளது. மேலும், ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதற்காக ஒருவர் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், தம்மீதான வழக்குகள் அனைத்தையும் தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற நூபுர் சர்மாவின் மனுவை அதிடியாக தள்ளுபடி செய்துள்ளது.

வெறிப் பேச்சு

‘ஞானவாபி மசூதி’ விவகாரம் தொடா்பாக  ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி கடந்த மே 27-ஆம் தேதி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி யது. இதில், பாஜக செய்தித் தொடர்பாள ராக இருந்த நூபுர் சர்மா (37) கலந்து கொண்டு  பேசினார். அப்போது அவா் இஸ்லாமிய மார்க்கத்தின் இறைத் தூதராக போற்றப் படும் நபிகள் நாயகத்தையும், அவரது துணைவியாரும், ‘இறைநம்பிக்கையாளர் களின் அன்னையர்’ என்று அழைக்கப்படுபவரு மான ஆயிஷாவையும் அவதூறாக பேசி மத வன்முறையை தூண்டினார். நூபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வெளியானது.

இது இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நூபுர் சர்மாவைக் கைது செய்யக் கோரி உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அத்துடன் நூபுர் சர்மா பேசியது சர்வதேச விவ காரமாகவும் மாறியது. நபிகளை இழிவுபடுத்தும் பேச்சுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் குவைத், சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வளைகுடா நாடுகளும்  கண்டனம் தெரிவித்தன. நூபுர் சர்மா ஆளும் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் என்ற நிலையில், அவரது கருத்து இந்திய அரசின் கருத்தாகவே பார்க்கப்படும் என்பதால், இதுதொடர்பாக இந்திய அரசு தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகள் வலியுறுத்தின. இந்தியத் தூதர்களுக்கும் அந்த நாடுகள் சம்மன் அனுப்பின.  நூபுர் சர்மா மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ‘இந்தியாவைப் புறக்கணிப்போம்’ (#Boycott India) என்ற ஹேஷ்டேக்-க்கும் வளைகுடா நாட்டு சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. 

நெருக்கடியால் நீக்கம்

இவ்வாறு நெருக்கடி அதிகரித்துக்  கொண்டே போனதால், நூபுர் சர்மாவை பாஜக வேறு வழியில்லா மல், தனது செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியது. எனினும் கைது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துக் கொண்டது. மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டாலும் கூட, நூபுர் சர்மாவைக் கைது செய்ய முடியவில்லை.  இந்நிலையில், நபிகளை அவ தூறு செய்த நூபுர் சர்மாவின் புகைப்படத்தை தனது முகநூலின் முகப்புப் படமாக வைத்து, தனது  ஆதரவைத் தெரிவித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த  கன்னையாலால் என்ற தையல் கடைக்காரர், இஸ்லாமிய மத  அடிப்படை வாதிகள் இருவரால் கடந்த செவ்வாயன்று கழுத்த றுத்துப் படுகொலை செய்யப்பட் டார். இது இந்தியா முழுவதும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை யாளிகள் பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தே கிக்கப்படும் நிலையில், அதன்மீது என்ஐஏ (NIA) விசாரணைக்கு உத்தர விடப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது.

நுபுர் சர்மா மனு தள்ளுபடி

இதனிடையே, பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமான நூபுர்  சர்மா, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். “அதில், சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தனக்கு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை மிரட்டல்கள் தொடர்ச்சி யாக வந்து கொண்டிருப்பதாகவும், அதனால் நாடு முழுவதும் தம்மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் தில்லிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதி பதிகள் சூர்ய காந்த், ஜே.பி. பார்திவாலா அமர்வில் வெள்ளிக் கிழமையன்று விசாரணைக்கு வந்தது. நூபுர் சர்மா தரப்பில் மூத்த  வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜரா னார். அவர் நூபுர் சர்மா மீதான வழக்குகளை தில்லிக்கு மாற்ற வலியுறுத்தினார். ஆனால், நூபுர் சர்மாவின் கோரிக்கையை ஒரேயடியாக  ஏற்க  மறுத்துவிட்ட நீதிபதிகள், சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நூபுர் சர்மாவுக்கு  கடும் கண்டனங்களை தெரிவித்த னர். இந்த விவகாரத்தில் நூபுர் சர்மா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்க ளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்த அவர்கள், நூபுர் சர்மாவின் மனுவை கடும் கண்டனங்களுடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாடு பற்றி எரிகிறது

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: “நூபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்றும் அதற்கு நிவாரணம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். நாட்டு மக்களால் நூபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது நூபுர் சர்மாவால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என்பதுதான் எங்களின் கேள்வி.  உண்மையில் நூபுர் சர்மாவின் பேச்சால் தேசப் பாதுகாப்புக்குத் தான் இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நூபுர் சர்மாவின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது பற்றி எரிகிறது. மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நூபுர் சர்மா கருத்து களை தெரிவித்துள்ளார். இரு பிரி வினருக்கு இடையே மோதல் களைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் படு கொலைக்கு காரணமே நுபுர் சர்மா வின் பேச்சுதான். நாட்டில் நடை பெற்று வரும் தற்போதைய சம்ப வங்களுக்கு நுபுர் சர்மா என்ற தனிநபர் மட்டுமே பொறுப்பு.

ஒரு கட்சியின் செய்தித் தொடர் பாளராக இருப்பவர் இத்தகைய கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என  நினைக்கிறார்கள். அதிகாரம் தங்க ளிடம் இருக்கிறது என்பதற்காக எப் படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? 

இது ஜனநாயக நாடுதான். ஜன நாயகம் அனைவருக்கும் பேச்சுரி மையை வழங்கியுள்ளது. ஆனால், அந்த ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை (ஞானவாபி மசூதி வழக்கு) எவ்வாறு விவாதிக்க முடியும்?  புல் வளர்வதற்கும் உரிமை உள்ளது. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது. ஆனால், தாம் பேசுவ தால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் கருத்தில்கொள்ளா மல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நூபுர் சர்மா பேசியிருக்கிறார். நீதித்துறையில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிப்பது தொலைக்காட்சி சேனல் மற்றும் நூபுர் சர்மாவின் வேலையல்ல. நாட்டின் சட்டங்களை மதிக்காமல் என்ன வேண்டுமானாலும் பேச லாம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? ஒரு கட்சி யின் செய்தித் தொடர்பாளராக இருந்தால், தனக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கா மல் எதையும் பேச முடியும் என அவர் நினைக்கிறாரா? ஒரு தேசிய அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம்  இதுபோன்ற குழப்பமான விஷயங்களைக் கூறலாம் என்ற உரிமையை அவருக்கு வழங்க முடியாது.

இந்த விவகாரத்தில் பல  எப்.ஐ.ஆர்.-கள் பதிவு செய்யப் பட்டும் கூட, நூபுர் சர்மா கைது செய்யப்படவில்லை. நூபுர் சர்மாவுக்கு எதிரான எப்.ஐ.ஆரை தொட்டுக்கூட பார்க்காத தில்லி காவல்துறை, நூபுர் சர்மா அளித்த புகாரின் பேரில் உடனே ஒருவரைக்  (ஆல்ட் நியூஸ் இணை நிறு வனர் முகம்மது ஜூபைர்) கைது  செய்கிறது. இதுவே நூபுர் சர்மா வுக்கு இருக்கும் செல்வாக்கை நமக்கு காட்டுகிறது. விசார ணைக்குப் போன போது, நூபுர் சர்மாவுக்கு தில்லி போலீசார் சிவப்பு கம்பள மரியாதை ஏதும் கொடுத்தார்களா? நூபுர் சர்மா மீது போடப்பட்ட எப்ஐஆரின் நிலை என்ன? என்றெல்லாம் தெரிய வில்லை. நூபுர் சர்மா போன்றவர்கள் மதவாதிகள் அல்ல, ஆனால், மதவாதத்தைத் தூண்டும் வகையில் அவர்கள் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். எனவே, தனது பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்காக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்.  வழக்குகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.  அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற கோரும் நூபுர் சர்மாவின் கோரிக்கை விஷயத்தில், நீதிமன்றத்தின் மனசாட்சி திருப்தி அடையவில்லை. எனவே, அவரது மனுநிராகரிக்கப்படுகிறது. நூபுர்  சர்மா வேறு வழிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம். உயர் நீதி மன்றத்தை அணுகி முறையிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி கள் குறிப்பிட்டுள்ளனர்.