states

இந்தியாவுடனான கூட்டணி வளர்கிறது; அதுதான் ரஷ்யாவுக்கு முக்கியம்

புதுதில்லி, ஏப்.1- இந்தியா - ரஷ்யா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது. அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று சந்தித்தார். இரு அமைச்சர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லால்ரோவ் பேசுகையில், தற்போதைய நாட்களில் நமது மேற்கத்திய நாடுகள் எந்த விதமான சர்வதேச பிரச்சனை வந்தாலும் அதை உக்ரைன் விவகாரமாக சுருக்குகின்றன. நாங்கள் எதற்கும் சண்டையிடப்போவதில்லை. இந்தியா இந்த சூழ்நிலையை ஒருதலைப்பட்சமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா - ரஷ்யா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது. அது தான் எங்களுக்கு முக்கியம். உலக அமைப்பை சமநிலையில் வைத்திருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். நாங்கள் இருநாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எங்கள் ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.