புதுதில்லி, ஆக.6- நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பிக்க ஒன்றிய அரசு அமிர்த பாரத நிலையம் எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள 1,300 முக்கிய ரயில் நிலையங்கள் அமிர்த பாரத ரயில் நிலையங்களாக மறுசீரமைக்கப்பட உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களுக்கான மறுசீரமைப்புப் பணிகள் இன்று தொடங்குகின்றன. இதன்மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும். ரயில் நிலையங்கள் எளிய மக்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும்’’ என்றார். ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் சிட்டி சென்ட்டர் போல மேம்படுத்தப்படும் என்றும், ரயில் நிலையத்தின் கட்டிடம் தரம் உயர்த்தப்படும் என்றும், வணிக மண்டலம், உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு இட வசதிகள் ஆகியவை இந்த மறுசீரமைப்பு ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.