புதுதில்லி,டிச.6- நாகாலாந்து மாநிலத்தில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் துணை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் எதிர்க்கட்சிக் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இரு அவைகளிலும் எம்.பி.க்களின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னரே நாகாலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒன்றிய அரசு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் சுகேந்து சேகர் ராய், மனோஜ் ஜா ஆகியோரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். மேலும் நாகாலாந்து சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாகாலாந்து பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவைக்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ‘மாநிலங்களவையில் நாகாலாந்து சம்பவம் குறித்து இன்று (திங்கள்) மாலை அமித் ஷா பதில் அளிப்பார்’ என்றார். மக்களவையிலும், நாகாலாந்து விவகாரம் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்தார். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘நாகாலாந்து விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான தகவல்களை அவையில் இன்று (திங்கள்) மாலை அளிப்பார்’ என்று தெரிவித்தார். அவை மீண்டும் கூடியபோது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதன்பின்னரே மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் மன்னிப்புக்கோரியது. தவறான கணிப்பால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மக்களும் தவறாக புரிந்து கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாகாலாந்தில் பதற்றம் நிலவினாலும் சூழ்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளது. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
சிபிஎம் கடும் கண்டனம்
நாகலாந்தில் ராணுவப் படையினரின் நடவடிக்கையில் 17 அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக கண்டித்துள்ளது. கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு உடனடியாக போதுமான நிவாரண அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. உளவுத்துறை தகவல் தோல்வி காரணமாக தவறுதலான முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று ராணுவத் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. இது எப்படி நடந்தது என்பது குறித்து துரித விசாரணை நடத்தி, குற்றமிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தக் கொடிய சம்பவம், ஒன்றிய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் உடனடியாக சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது எனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.