states

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியது மோடி அரசு!

புதுதில்லி, ஜூன் 16 - தில்லியில் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த நேருவின் பெயரை, ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கான பெயரை, “பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் சொசைட்டி” என்றும் மாற்றியுள்ளது. புதிய இந்தியாவின் சிற்பியும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு,  தில்லியில் 16 ஆண்டுகளாக வசித்து வந்த  ‘தீன் மூர்த்தி இல்லம்’ அவரது மறை வுக்குப் பிறகு, 1964 முதல் நேரு  நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக மாக செயல்பட்டு வருகிறது. நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சுதந்திர போராட்டங்கள் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்படும், நேரு நினைவு சொசைட்டியின் தற்போதைய தலைவராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 29 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்நிலையில் சொசைட்டியின் பெயரை பிரதமர்கள் அருங்காட்சியகம் என  மாற்றப் போவதாக 2022-ஆம் ஆண்டே மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்து இருந்தது. அதன்படியே தற்போது, ஜவஹர்லால் நேரு-வின்  பெயர் நீக்கப்பட்டு “பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் சொசைட்டி” என்று மாற்றப்பட்டுள்ளது. 14 முன்னாள் பிரதமர்களின் நினைவுகள், சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில், இந்த அருங்காட்சியகத்தில் புதிதாக புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.