states

தேநீர் கோப்பையில் பீர் அருந்தும் பாஜக-வினர் ராகுலை விமர்சிப்பதா?!

புதுதில்லி, மே 5 - நேபாளத்தைச் சேர்ந்தவர் சும்னிமா  உதாஸ். இவர் சிஎன்என் தொலைக்காட்சி யின் தில்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டில் நிர்பயா வழக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டில் மலேசிய விமானம் மாயமானது உட்பட பல்வேறு முக்கியச் சம்பவங்கள் குறித்து செய்தி சேகரித்துள்ளார். பத்திரிகை யாளர் பணிக்காக பல்வேறு விருதுகளை யும் வென்றுள்ளார். இந்நிலையில், சும்னிமா உதாஸுக்கும், நீமா மார்ட்டின் ஷெர்பா என்பவருக்கும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில்  திங்களன்று திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்திற்கு தனது நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியையும், சும்னிமா உதாஸ் அழைத்திருந்தார். அதனடிப்படையில், ராகுலும் 5 நாள் பயணமாக நேபாளம் சென்றிருந்தார். அங்கு காத்மாண்டின் புகழ்பெற்ற எல்ஓடி என்ற இரவு விடுதியில் சும்னிமா உதாஸ் அளித்த விருந்திலும் பங்கேற்றார். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட இந்த விருந்து வீடியோவைத்தான் பாஜக-வினர், சமூகவலைதளங்களில் வெளியிட்டு, ராகுல் காந்தியை மிகமோசமாக அவதூறு செய்தனர். “முழு  நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி” என்று விமர்சித்தனர். “

நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது நாட்டில் என்ன அவ்வளவு பெரிய குற்றமா?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பினாலும், பாஜக- வினர் விடுவதாக இல்லை. சீன நாட்டின் பெண் தூதர் ஒருவருடன் ராகுல் காந்தி அளவளாவியதாக மற்றொரு சர்ச்சை யைக் கிளப்பினர்.  ஆனால், அந்தப் பெண் நேபாளிதான் என்றும் அவரும் ஒரு பத்திரிகையாளர்தான் என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதர வாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் பாஜக-வை கடுமையாக சாடியுள்ளனர். “ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது மோசமான விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால், நாடாளு மன்றத்தில் போர்னோகிராபி படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை” என்று தஸ்லிமா நஸ்ரின் காட்டமாக கூறியுள்ளார். “ராகுல் காந்தியோ இல்லை வேறு ஒரு நபரோ, அவருடைய தனிப்பட்ட நேரத்தில் நைட் கிளப் செல்கிறாரா அல்லது திரு மண விருந்தில் பங்கேற்கிறாரா என்று கண்காணிப்பது யாருடைய வேலையும் இல்லை. பாஜக ஊதுகுழல்கள், ராகுலை விமர்சிக்கும் முன், தங்கள் கட்சியினர் தேநீர்  கோப்பையில் பீரை ஊற்றி அருந்தும் இரட்டை வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்று மஹூவா மொய்த்ராவும் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.