திருவனந்தபுரம், ஜுன் 19- புலம்பெயர்ந்தோரை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும், மதிக்கவும் இங்கு ஒரு அரசு இருக்கிறது. அந்த உண்மையின் சூரிய பிரகாசத்தின் முன், தனிப்பட்ட சில புறக்கணிப்புக் குரலை புலம்பெயர்ந்தோர் மறந்துவிடலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உலக கேரள சபையின் மூன்றாம் அமர்வு வெள்ளி, சனி (ஜுன் 17,18) ஆகிய இரண்டு நாட்கள் கேரள சட்டப்பேரவையில் நடந்தது. அதில் எழுந்த விவாதங்களுக்கு ஆன்லைனில் பதிலளித்து முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: புலம்பெயர்ந்தோரின் இந்த அமர்வை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக சிலர் சந்தேகிக்கின்றனர். நான் நோய்வாய்ப்பட்டதற்கு முந்தைய நாள், யுடிஎப் தலைவர் ஹிபி ஈடன் செல்லானத்தில் நடந்த கடல் சுவர் கட்டும் நிகழ்வில் என்னுடன் பங்கேற்றார். மறுநாள் சட்டமன்ற கூட்டதொடர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்னுடன் இருந்தார். இவர்கள் அனைவரும், இம்மாத இறுதியில் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரிலும், அடுத்த மாத துவக்கத்தில் நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பதும், புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சிகளை மட்டும் புறக்கணிப்பதும்தான் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு. இது முற்றிலும் அபத்தமானது. புலம்பெயர்ந்தோர் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுகின்றனர். அவர்கள் அதை விரும்புகிறார்கள். அதற்கு நாடும், உலக மலையாளிகளும் அர்ப்பணிப்பதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் புறக்கணிப்பு நாடகம். அதை நாடு ஏற்காது. நாட்டின் முன்னேற்றத்திற்காக உலகெங்கிலும் உள்ள மலையாளிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கும் போது நல்லவர்கள் எவரும் ஒத்துழைப்பார்கள். தங்கள் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் என்ன கொடுக்கலாம் என்று நினைத்து மெழுகுவர்த்திபோல் உருகுவோர் புலம்பெயர்ந்தோர். அந்தத் தியாகத்தின் முன் நாம் ஒன்றுபட்டு தலைவணங்க வேண்டும்.
கடந்த முறை நடந்த உலக கேரள சபையின் கூட்டத்தில் ஒரு பகுதியினர் ஒத்துழைக்கவில்லை. இம்முறை மன்றம் அதன் விவாதங்களைத் தொடங்கும் முன் இந்தப் பகுதியினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் அவர்கள், அதற்கு புறமுதுகு காட்டிவிட்டனர். அவர்களை வழிநடத்துவது எத்தகைய ஜனநாயகம் என்பது புரியவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளே முறையற்ற தன்மையை சம்பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். பின்னர் சிலர் மிகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறுகிறார்கள். எம்.ஏ.யூசபலி தெளிவுபடுத்திய சில விசயங்களை வைத்து சிலர் அவரை அவமானப்படுத்த முயன்றனர். இது சரியல்ல என்று சம்பந்தப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் தலைமையே தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார். புலம்பெயர்வு கணக்கெடுப்பு இந்த ஆண்டு கேரளாவில் இடம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் என்ஆர்ஐகளின் தரவுத்தளம் விரிவுபடுத்தப்படும். இதற்காக புலம்பெயர்ந்தோரின் தரவு தளம் தயாரிக்கப்படும். விரிவான உலகளாவிய பதிவு பிரச்சாரம் நடத்தப்படும். உலக கேரள சபை, விரைவில் சட்ட சபையாக மாறும். சபையின் பரிந்துரைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு தேவையான முடிவு எடுக்கப்படும். இதில், ஒன்றிய அரசுடன் ஆலோசித்து செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து பரிசீலித்து, மாநிலம் முடிவெடுக்கும். கேரளாவில் ஒரு சிறந்த உயர்கல்வி நிறுவனத்தை புலம்பெயர் சமூகம் அமைக்க முடியும். இதற்கான அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும். வளர்ந்த நடுத்தர வருவாய் நாடுகளின் நிலைக்கு கேரளாவை உயர்த்துவதே இதன் நோக்கம். 25 ஆண்டுகளுக்குள் இந்த நிலையை அடைய திட்டம் வகுக்கப்பட்டது. புலம்பெயர்ந்தோரும் இதற்குத் தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றார் முதல்வர்.