பாலக்காடு, ஜன.18- சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் 700 பழங்குடியினருக்கு அர சுப் பணி வழங்கப்பட உள்ளதாக கேரள அமைச்சர் கே. ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். துறைவாரியாக, வனங்களின் கள அலுவலர்களாக ஐந்நூறு பேருக்கும், கலால் துறையில் இரு நூறு பேருக்கும் பணி வழங்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநில பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன், சபரிமலை வனப் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களை பார்வை யிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார். மேலும், “பழங்குடியினருக்கு நிலம், வீடு மற்றும் சிறந்த கல்வி வழங்குவதை இடது ஜனநாயக முன் னணி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரே இடத் தில் நிரந்தரமாக பலரும் தங்காத நிலையில் மேற்கண்ட வசதிகள் தற்போது இல்லாமல் உள்ளது. இதனால் அவர்களை நிரந்தரமான இடங்களுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் இல்லாத கிராமங்களில் மின்சாரம் வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்த அமைச்சர், “பழங்குடியினர் குடியிருப்புகளின் மேம்பாட்டில் வனத்துறை, காவல் துறை மற்றும் கலால் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.