என்னவாயிற்று தமிழ் இந்து ஏட்டிற்கு?
இந்து தமிழ் திசை ஏடு சில சமயங்களில் தன்னை முழுமையாக காவி வண்ணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது. ஜூன் 20 தலையங்கத்திற்கு “அக்னி பாதை வேலைவாய்ப்பு அல்ல, தேசத்தின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்ப்பது கண்டனத்திற்குரியது என்று முழங்கும் இந்த ஏடு, அக்னி பாதை திட்டத்தை ஒரு வேலைவாய்ப்பாக பார்க்கக் கூடாது; தேச பக்த சேவையாக பார்க்க வேண்டும் என்று இலவசமாக அருள் உபதேசம் வழங்கிவிட்டு, மறுபுறத்தில், இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள், வசதிகள் உள்ளன என்று பட்டியலிடுகிறது . தங்களுடைய எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து ஏற்பட்ட கவலையால் போராடும் இளைஞர்களை தேசவிரோதிகளாகச் சித்தரித்து அவர்களை ராணுவப் பணியில் மட்டுமல்ல; எந்த ஒரு அரசுப்பணியிலும் சேர்வதற்கான தகுதியை இழந்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்குகிறது அந்த ஏடு. தங்கள் வாழ்க்கையை இந்திய ராணுவத்திற்காக அர்ப்பணித்துவிட்டு ஓய்வூதியப் பலன்கள் கூட கிடைக்காமல் வெம்பி வெதும்பினர் முன்னாள் ராணுவத்தினர். அவர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. முழு ராணுவ சேவை செய்தவர்களுக்கே அந்த கதி என்றால் நான்காண்டு காலம் மட்டும் பணியில் இருந்துவிட்டு எதிர்காலம் குறித்த எந்த நிச்சயமும் இல்லாத நிலை வந்தால் அதுகுறித்து கேள்வி எழுப்பக்கூடாதா? ஏற்கெனவே ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் கடைசிகட்ட பணி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களும் கூட போராடுகிறார்கள். ஆனால் போராடுவதே கண்ணியத்தை இழந்த செயல் என்று கண்டிக்கிறது இந்த ஏடு.
பல நாடுகளில் ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இவர்களுக்கு மட்டும் என்ன கேடு என்ற பாணியில் போராடும் இளைஞர்களை சபிக்கிறது இந்த ஏடு. நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றிவிடுவது தேசபக்தியின் உச்சமா? ராணுவத் தளவாட உற்பத்தியைக் கூட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தருவது தேசபக்தியா? போர்விமானங்களை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதோடு அதில் ஊழல் செய்வது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமா? போராடும் இளைஞர்களை இந்த அளவுக்கு சபிக்கும் இந்து தமிழ் ஏடு, ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை தருவோம் என்று கூறிவிட்டு பகோடா விற்று பிழைத்துக்கொள்ளுமாறு மோடி கழற்றிவிட்டபோது இப்படி பொங்கியது உண்டா? இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படும் இந்த ஏடு, மதச்சார்பற்ற பாரம்பரியமிக்க இந்து குழுமத்தின் பெயரைத் தாங்கிவரும் தனக்கு என்ன ஆயிற்று என்று சுயபரிசீலனை செய்துகொள்வதும் நல்லது.
தினமலரின் திருகுதாளம்
பாஜகவின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ ஏடான தினமலர் மோடி அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு முரட்டு முட்டாக தினந்தினம் கொடுத்து வருகிறது. ஜூன் 21 ஏட்டின் முதல் பக்கத்தில் ‘அக்னி பாத் வீரர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு’ என்ற தலைப்பில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி இளமையிலேயே ஓய்வுபெறப்போகும் இளைஞர்களுக்கு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அள்ளிவீசுவதாக அளந்துவிட்டுள்ளது. கரகாட்டக்காரன் படத்தில் கோவை சரளா ‘என்னை பொன்னமராவதி பார்ட்டியில் கூப்டாக, காரக்குடி பார்ட்டியில் கூப்டாக’ என்று அளப்பதுபோல அக்னிபாதை வீரர்களுக்கு ஆனந்த் மகிந்த்ரா பயோகான் லிமிடெட், ஆர்பிஜி அப்பல்லோ மருத்துவமனை, டிவிஎஸ் மோட்டார் என பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்த்ராவை நோக்கி, அக்னி பாதை வீரர்களுக்கு நீங்கள் அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களில் எத்தனை பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒருவர். இதற்கு அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஒருபுறத்தில் பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் சில பொதுத்துறை வங்கிகள் அக்னி பாதை வீரர்களை நாங்களும் நடைபாவாடை விரித்து வரவேற்கத் தயார் என்று அறிவிப்பு வெளியிடுகிறது. இன்னும் ஒரு சிலநாளில் அக்னி பாதை வீரர்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் மூடப்பட்டது என்று கூட தினமலர் செய்தி வெளியிடக்கூடும். உண்மையின் உரைகல் ஆயிற்றே!
மன்னர்குடி ஜீயரின் ஆன்மீகத்தொண்டு
அக்னி பாதை திட்டத்தை ஆளாளுக்கு ஆதரிக்கும் நிலையில், மன்னார்குடி ஜீயர் மட்டும் என்ன சும்மா இருப்பாரா! அவரும் களத்தில் குதித்துவிட்டார். அக்னி பாதை திட்டம் குறித்து விவரம் தெரியாதவர்கள்தான் போராடுகிறார்கள் என்று அண்டசராசரம் அனைத்தும் அறிந்த ஜீயர் அருளாசி வழங்கியுள்ளார். இத்திட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார் இந்த ‘முன்னாள் ராணுவ வீரர்’ இந்த திட்டத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் பலர் அறிக்கை வெளியிட்டுள்ளது ஜீயருக்குத் தெரியாது போலும். விட்டால் மன்னார்குடி மடப்பள்ளியில் அக்னி பாதை வீரர்களுக்கு புளியோதரை கிண்ட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூட இவர் அறிவிக்கக்கூடும். ஜீயர் அத்துடன் நிற்கவில்லை. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோதச் செயல் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளை கடலில் தூக்கிப்போட்டது யார் என்பதை ஜீயர் அறிவார். இந்தக் கருத்துக்களையெல்லாம் ஜீயர் அருளாசி என்ற தலைப்பில் தினமலர் ஏடு வெளியிட்டிருப்பது உச்சகட்ட காமெடி.