புதுதில்லி, ஜூன் 24- குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு (64) வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஒடிசாவில் உள்ள பழங்குடி சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் முர்மு. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பல பாஜக தலைவர்கள் முன்னிலையில் அவர் தனது மனுவை தாக்கல் செய்தார். முர்முவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பி.சி.மோடியிடம் பிரதமர் மோடி வழங்கினார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, முர்மு எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரை தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.