சென்னை,மார்ச் 14- பள்ளிபாளையம் வேலுச்சாமி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ.வாசுகி உள்பட மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 14 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 2010 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரருக்கு கட்ட வேண்டிய தவணையை கட்டாததால் கந்துவட்டி சமூக விரோதக் கும்பல் அந்த பெண்ணை கும்பல் பாலியல் வன்முறை செய்ததுடன், வீடியோ படம் எடுத்து இணைய தளத்தில் பதிவேற்றினர். மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமி அவர்களிடம் நடந்ததை முறையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தோழர் வேலுச்சாமி காவல்துறையினரிடம் புகார் தெரி வித்தார்.
இதனால் சமூக விரோதிகள் தோழர் வேலுச்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதன் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை யினரிடம் வேலுச்சாமி முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டி சமூக விரோதக் கும்பல் தோழர் வேலுச்சாமியை 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த படு கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல ஜனநாயக அமைப்புகளும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டன இயக்கங்களை நடத்தினர்.
இதனையடுத்து, இளம்பெண் பாலியல் வழக்கு, வேலுச்சாமி படுகொலை வழக்கு என தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஆமையன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக, வழக்கில் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்ட னையுடன், ரூ. 35 லட்சம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் வேலுச்சாமி படுகொலை வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா அவர்கள், குற்றவாளிகள் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, மூன்றாண்டு கடுங்காவல்,
மேலும் ஓராண்டு கால தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் வழங்கி மார்ச் 14 அன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த படுகொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. இந்த இரண்டு வழக்குகளையும் அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் திருமலைராஜன் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மனதார பாராட்டுகிறது.