states

நீட் விலக்கு மசோதா பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

புதுதில்லி,ஏப்.4- நீட் தேர்வு விலக்கு மசோதா  பற்றி பேச அனுமதி மறுத்ததால் நாடாளுமன்ற மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு கூட்டத்தொடரில், நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள தமிழக ஆளுநரின் நடவடிக்கை, பி.எப். வட்டி குறைப்பு ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்து கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை  மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.  ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதம் செய்வது பற்றி பேச அனுமதி மறுத்ததாலும்  நீட் விலக்கு மசோதாவை  ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்தும்  திங்களன்று திமுக எம்.பி.க்கள்  வெளிநடப்பு செய்தனர். கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர் தவறுவதாக குற்றம்சாட்டினர்.