புதுதில்லி, ஜூன் 7 - ஒடிசா ரயில் விபத்தில் சிதைந்து போய், அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள உடல்கள், அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவற்றைப் பாதுகாப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து, உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில், 288 பேர் பலியாகினர். இதில் 205 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 83 பேர் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. ரயிலில் பயணம் செய்த தங்களின் குடும்ப உறுப்பினர்களை, அதிகாரிகள் காட்டும் புகைப்படங்களை கொண்டும், நேரில் பார்த்துமே உறவினர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். ஆனால், உடல்கள் மிக மோசமாக சேதம் அடைந்திருப்பதால், அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் வந்து பார்க்கும் வரை, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, பலியானோரின் உடல்கள் எம்பாமிங்-கும் (இறந்தவரின் உடலை உருக்குலையாமல் பாதுகாக்கும் மருத்துவ அறிவியல் செயல்முறை) செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், பலரது சிதைந்த உடல்கள் அழுகும் நிலையில் இருப்பதால், எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. “ஒருவர் இறந்துபோன 6 முதல் 12 மணி நேரத்திற்குள் எம்பாமிங்கை செய்ய வேண்டும். இறந்த பிறகு 12 மணி நேரத்திற்குப் பின்னால் எம்பாமிங் செய்தால் அதற்கு பலன் இருக்காது. அதிலும் ஒடிசா ரயில் விபத்தைப் பொறுத்தவரை, அதில் பலியானோரின் உடல்கள் சேதமடைந்துள்ளதால் எம்பாமிங் செய்வது மிகவும் கடினம்” என்று புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரபாஸ் ரஞ்சன் திரிபாதி நிலைமையை விளக்கியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸூம், “விபத்து நடந்து, 30 மணி நேரத்துக்குப் பிறகே எங்கள் மருத்துவமனைக்கு உடல்கள் வந்தன. இதனால், உடல்களைக் குளிர்பதன கிடங்கில்தான் வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடையாளம் காணப்படாத உடல்களை, இப்படியே நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்பதால், ஜூன் 5-ஆம் தேதி டிஎன்ஏ பரிசோதனை துவங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட்டு, பலியானவர்களின் உடல்களில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் பொருத்தி பார்க்கும் பணி நடந்து வருகிறது. ரயிலில் பயணம் செய்து காணாமல் போனவர்களின் உறவினர்களில் 33 பேர் தங்கள் டிஎன்ஏ மாதிரியை கொடுத்துள்ளனர். ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இந்த டிஎன்ஏ மாதிரியை சேகரித்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரிய வரும் என்றும் அதன் அடிப்படையில் உடல்கள் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் பாலசோர் நகராட்சி கூடுதல் ஆணையர் சூர்யவன்ஷி மயூர் விகாஸ் தெரிவித்துள்ளனர்.