சென்னை,அக். 20- மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் இளைய மகன் தே.மணி என்ற மணிமன்றவாணன் (78). இவர் பாவாணரின் இறுதிக் காலம் வரை திருமணம் செய்து கொள்ளாமல், அவரது தமிழ் பணிகளுக்கு பக்க துணையாக இருந்தவர். பாவாணரின் மறைவுக்கு பின் தனது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர், தமிழக அரசின் இதழான ‘தமிழரசு’ மாத இதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கு இமானுவேல் தேவநேயன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், மணிமன்றவாணன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேற்கு கலைஞர் நகர், புதுச்சேரி அரசு விருந்தினர் இல்லம் எதிரில் அமைந்துள்ள பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டது. முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தி யில், “தமிழுக்கு தொண்டு செய்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழித்தோன்றலான மணிமன்ற வாணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.