புதுதில்லி,பிப். 13 - அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை மார்ச் 13-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை திங்களன்று காலை கூடியதும் அதானி பங்குச்சந்தை ஊழல் விவகா ரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தாங்கள் அளித்த நோட்டீஸ்களை, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்க மறுத்து விட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதியில் கூடி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, எம்.பி.க்கள் ராகவ் சத்தா, இம்ரான் பிரதாப் கார்ஹி, சக்தி சின்ஹ் கோஹில், குமார் கேத்கர் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரது பெயரை குறிப்பிட்டு, இதுபோன்று அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற் படுத்தக் கூடாது என ஜகதீப் தன்கர் எச்சரிக்கை விடுத்தார். எனினும், அமளி குறையாததால், முற்பகல் 11.50 மணி யளவில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்புக்கு பிறகு, மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. அதானி யின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் ஏற்படவே, மாநிலங்களவையை மார்ச் 13-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்கள வைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.