புதுதில்லி, பிப்.8 - மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசையும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் தாக்கி பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. பின்னர், அக்கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், குடியரசுத் தலைவர் உரை குறித்து பேசாமல், காங்கிரசை விமர்சித்து பிரதமர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். முன்னதாக பேசிய காங். உறுப்பினர் ப.சிதம்பரம், நாட்டில் 60 லட்சம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட தாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நான்கு ஆண்டுகளில், தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதத்திலிருந்து 3.7 சதவீத மாகக் குறைந்துவிட்டது. தனிநபர் வருமானம் குறைந்துள் ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் இடைவெளி உள்ளது. உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 101 ஆக உயர்ந்துள்ளது. 102 பில்லியனர்கள் 142 பில்லியனர்கள் ஆகி விட்டனர். நாட்டின் நலனுக்கு பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை. பொது நலம் காற்றில் பறக்கவிடப்படுகிறது என்றார். அப்போது பேசிய மோடி மகாத்மா காந்தி இந்தியாவில் காங்கிரஸை விரும்பவில்லை. மேலும் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 15 ஆண்டுகள் கழித்தே கோவாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. கோவா பிரச்சனையில் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கையை அம் மாநில மக்கள் மறக்க மாட்டார்கள். இதற்கு முன்னாள் பிரதமர் நேரு தான் காரணம் என்றார்.