states

img

குஜராத்திலும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் இடிப்பு

அகமதாபாத், ஏப்.16- மத்தியப் பிரதேசத்தைச் தொடர்ந்து, குஜராத் மாநிலத்திலும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகளை பாஜக ஆட்சியாளர்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர். ராம நவமி கொண்டாட்டம் - ஊர்வலம் என்ற பெயரில், சங்-பரிவாரங்கள் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நாடு முழுவதும் மதவெறியாட்டம் போட்டனர். முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில், திட்டமிட்டபடியே வன்முறைகள் அரங்கேறின. குறிப்பாக, ம.பி. மாநிலம் தலாப் சவுக், கவுசாலா மார்க், தபாடி சவுக், சஞ்சய் நகர் மற்றும் மோட்டிபுரா பகுதிகளில் ஏழை முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதேபோல, குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மற்றும் சபர்கந்த் மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்திலும், ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியிலும், தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் சங்-பரிவாரங்கள், ராம நவமி பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இந்த ஒட்டுமொத்த தாக்குதல் சம்பவங்களில் 2 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, பாஜக ஆளும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே கொத்துக் கொத்தாக கைது செய்தது. இப்போதும் கைது நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசானது, கார்கோன் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது, எந்தப் பகுதியில் மோதல் ஏற்பட்டதோ, அந்த காஸ்கஸ்வாடி பகுதியிலிருந்த முஸ்லிம்களின் வீடுகளை, ஊர்வலம் நடந்த மறுநாளே- ஏப்ரல் 11 அன்று ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது.  இந்த வகையில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 16 வீடுகள், 29 கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.

இவை ஆக்கிரமிப்பு கட்டடங்கள் என்று மாவட்ட நிர்வாகம் கூறினாலும், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (PMAY) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடும் கூட இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிர்லா மார்க்கில் உள்ள ஹசீனா பக்ரூவும், அவரது கணவரும் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று 2020-இல் தங்களுக்கான ‘பக்கா’ (pucca) வீட்டைக் கட்டியிருந்தனர். இந்த வீட்டையும் சிவராஜ் சிங் சவுகான் அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது. திடீரென வீட்டிற்குள் புகுந்து, உள்ளே இருந்தவர்களை வெளியேற்றிய நகராட்சி ஊழியர்கள், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட வீடு’ என்று எழுதப்பட்டு இருந்ததை, மாட்டுச் சாணத்தைக் கொண்டு அழித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே புல்டோசர் மூலம் வீட்டை இடித்துத் தள்ளினர்.  இதுதொடர்பாக விவாதங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளன. ‘‘சாகர்புரா சாலையின் இருபுறமும் உள்ள புதர்களில் மறைந்திருந்துதான், கலவரக்காரர்கள் கல்வீசினர். இதனால், இந்த புதர்கள் அகற்றப்படுகின்றன. அதேபோல், இங்கு சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், வீடுகள், கடைகளும் இடிக்கப்படுகின்றன” என்று, ம.பி. மாநிலத்தின் கோர்கான் மாவட்ட ஆட்சியர் அனுகிரகா கூறியதையே, ஆனந்த் மாவட்டத்தின் ஆட்சியர் எம்.ஒய். தக்ஷினும் கூறியுள்ளார்.