திருவனந்தபுரம், மார்ச் 17 - கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணியில் (எல்டிஎப்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் தொகுதிக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவருமான ஏ.ஏ.ரஹீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எல்டிஎப் வெற்றிபெறக்கூடிய 3 மாநிலங்களவை தொகுதிகளில் இரண்டில் சிபிஎம், மற்றொன்றில் சிபிஐ போட்டியிடுகின்றன. சிபிஐ வேட்பாளராக அக்கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளர் பி.சந்தோஷ்குமார் முன்மொழியப்பட்டார். திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள மணிக்கல் ஊராட்சியில் உள்ள தைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம். இவரது பெற்றோர் எம். அப்துல் சமத்-ஏ.நபீசா பீவி ஆவர். இவர் திருவனந்தபுரம் லா அகாடமி சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
கேரளப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வரலாற்று பாடத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய வித்யா பவனில் பத்திரிகை துறையில் டிப்ளமோ முடித்து, கைரளி தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக குறுகிய காலம் பணியாற்றினார். ரஹீம், கேரளப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலில், வர்கலா சட்டமன்றத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டார். யுவதாரா இதழின் ஆசிரியராக இருந்தார். எஸ்எப்ஐ மாநில துணைத் தலைவராகவும் டிஒய்எப்ஐ மாநில செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஏழைகளுக்கு உணவளிக்கும், இதயம் நிறைந்த மதிய உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்து வருபவர். பெருவெள்ளத்தின்போது ‘ரீசைக்கிள் கேரளா’ மூலம் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்துவதிலும் முன்னணியில் நின்றவர். இவருக்கு அமிர்தா சதீசன் என்கிற வாழ்க்கைத் துணையும், குல்மோகர், குல்னார் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இளைஞர்களுக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பு
மாநிலங்களவைக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.ஏ.ரஹீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய இளைஞர்களுக்காக குரல் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு வாய்ப்பளித்துள்ளது என்றார். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாகவும், கட்சி அளித்துள்ள பெரிய பொறுப்பை நன்கு உணர்ந்திருப்பதாகவும் ரஹீம் கூறினார்.