புதுதில்லி, ஜன.25- அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி’ என்ற ஆய்வு நிறுவனம் புகார் கூறியுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் செயல் பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2 ஆண்டாக ஆய்வு செய்து இக்குற்றச் சாட்டுகளை கூறியுள்ளது. பங்கு சந்தையிலும் துணிகர முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளதாகவும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாகவும், கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவன பங்குகளின் விலை சரிந்துள்ளன. மேலும் உலக பணக் காரர்கள் வரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த கெளதம் அதானி 4-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.