states

அதானி - மோடியின் ஊழல் மோசடியை மழைக்கால கூட்டத்தொடரிலும் கிளப்புவோம்!

புதுதில்லி, ஜூன் 2 - அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச் சந்தை ஊழல்  விவகாரத்தை மழைக்கால கூட்டத் தொடரிலும் கிளப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ எனும் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் தரவுகளைப் பெற்று, அதனடிப்படையில் 106 பக்க ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம் சாட்டியது.  ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை குறித்து, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் ஒன்றுக்கு கடைசிவரை மோடி அரசு பதிலளிக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை ஆராய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை யையும் ஏற்கவில்லை. அதானிக்காக நாடாளுமன்றத்தின் 2 கூட்டத் தொடர்களையே முழுமையாக மோடி அரசு வீணடித்தது. 

இந்நிலையில்தான், அதானி விவகாரத்தில்  மோடி அரசின் முன்னால் இருக்கும் 100 கேள்வி களை புத்தகமாக காங்கிரஸ் கட்சி வெளி யிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வியாழனன்று தில்லியில் வெளியிட்டார். அதானி விவகாரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலும் இப்பிரச்சனையை எழுப்புவோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். “வரும் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது. அதில் எங்கள் முதல் கோரிக்கையே மோடி - அதானி கூட்டணியின் ஊழல் (மோடானி ஊழல்) மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவதாகத்தான் இருக்கும். பின்னர் அதுபற்றிய புத்தகத்தை வெளி யிடுவோம். அதானி விவகாரம் குறித்து 100 கேள்விகளை எழுப்புவோம். அதற்கு மோடி பதிலளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.