states

img

உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

முன்தொகுக்கப்பட்ட (pre-packaged) அரிசி, கோதுமை, பால் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தி, மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றிய அரசு சுமைகளை ஏற்றியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் உணவுப் பொருள்களுக்கு விதித்திருந்த வரிக் கொள்கையைக் கைவிட்டது. கடந்த 75 ஆண்டுகளில் அரசி, கோதுமை, பருப்பு வகைகள், தயிர், பாலாடைக்கட்டி (பனீர்), இறைச்சி, மீன்,  வெல்லம் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் எதற்கும் வரி விதிக்கப்படவில்லை. இப்போது மோடி அரசாங்கம் ஜிஎஸ்டி வரி விதித்து நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தைக் கொண்டாடும் 75ஆவது ஆண்டில் (‘Azaadi ka Amrut Mahotsav’) நன்கொடை(‘gift’)யாக அளித்திருக்கிறது.

ஒன்றிய அரசாங்கம், ஜிஎஸ்டி வரிகளை, சுடுகாட்டுச் செலவினங்களுக்கும், மருத்துவமனை அறைகளுக்கும், எழுதும் மை போன்றவற்றிற்கும்கூட உயர்த்தி இருக்கிறது. ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தை வங்கியிலிருந்து வங்கிக் காசோலைகள் மூலம் திரும்பப் பெறுகிறார் என்றால் அதற்கும்கூட 18 சதவீதம் வரி விதித்திருக்கிறது.

நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் 7 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும் வேகமாக உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது இவ்வாறு குரூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள வரிகள் மக்களின் வாழ்வாதாரங்களை மேலும் அழிவுக்குக் கொண்டுசென்றிடும்.   அரசிற்கு வருவாயை உயர்த்திட, மோடி அரசாங்கம் மகா கோடீஸ்வரர்களுக்கு (super rich) வரி விதித்திட வேண்டும். மாறாக ஏழை மக்கள் மீது சுமைகளை ஏற்றக்கூடாது. உலகில் பில்லியனர்கள் அதிகரித்துவரும் நிலையில், பம்பாய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் கம்பெனிகள், 2021-22இல் மொத்த லாபம் 9.3 லட்சம் கோடி ரூபாய்களாகும். இது சென்ற ஆண்டைவிட 70 விழுக்காடு அதிகமாகும். கடந்த பத்தாண்டுகளில் (2010-2020) ஈட்டிய சராசரி லாபத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாகும். இவ்வாறு மகா கோடீஸ்வரர்களாகியிருப்பவர்கள் மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அவர்களுக்கு மேலும் வரிச் சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும் அளித்துக்கொண்டிருக்கிறது. பல ஆடம்பரப் பொருள்களுக்கு (luxury goods) மிதமான அளவில் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. தங்கத்திற்கு வெறும் 3 விழுக்காடும், வைரத்திற்கு 1.5 விழுக்காடும் வரி விதித்துள்ள அதே சமயத்தில் உணவுப் பொருள்களுககு 5 விழுக்காடும் அதற்கு மேலும் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது.

இவ்வாறு விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிராக எதிர்ப்பு எதுவும் இல்லை என்று மோடி அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பது உண்மையல்ல. கேரள முதலமைச்சர், தங்கள் அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.  மக்களின் வாழ்க்கைமீது இவ்வாறு குரூரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு எதிராக விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடுமாறு அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.