states

பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு

திருநெல்வேலி, ஏப்.17- விசாரணைக் கைதிகளின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கி சித்ரவதை செய்த காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் திங்கட்கிழமை அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 506(1), 324, 326 ஆகிய பிரிவுகளில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

சிபிஎம் வரவேற்பு

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வதைத்த ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வதைத்த ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வதையில் ஈடுபட்ட அதிகாரியும், காவல்துறையினரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், விரைவாக குற்ற வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. மனித உரிமையை முன்வைத்து இயங்கும் பல்வேறு இயக்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தன.  தற்போது தமிழ்நாடு அரசாங்கம், பல்வீர் சிங் மேற்கொண்ட கொடும் வதையினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்துள்ளது அவசியமான, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். இந்த வழக்கினை முறையாக முன்னெடுத்து குற்றமிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.