சென்னை,ஏப்.21- சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய அரசின் நாசகர கொள்கைகளை எதிர்த்து இந்தியாவில் உள்ள மத்திய தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து வலுவாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவசர கதியில் தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த 12.04.2023 அன்று 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவை தொழிலாளர் துறை அமைச்சர் முன்மொழிந்தார்.
அன்றைய தினமே தமிழ்நாடு மாநில சிஐடியு சார்பில் நமது மாநிலத்திற்கு இந்த சட்டம் பொருத்தமானதல்ல, உடன் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பத்திரிகைகளிலும் செய்தியானது. சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்டு அனைத்துக் கட்சியினரும், இது பொருத்தமற்ற செயல், இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என கடிதமும் எழுதினார்கள். தமிழ்நாடு சிஐடியு அனைத்து தொழிலாளர்களையும் இந்த சட்ட முன்வடிவுக்கு எதிராக போராட வேண்டுமென அறைகூவல் விடுத்தது. அதன்படி கடந்த 15,16,17 ஆகிய தேதிகளில் அனைத்து ஆலைகள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தது. இவ்வளவுக்கு பின்பும் ஏப்ரல் 21 அன்று தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பாலான கட்சிகளின் ஆட்சேபணையும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்ட மசோதா நிறைவேற்றியிருப்பது திமுக அரசு முதலாளிகள் பக்கம் நிற்பதையே காட்டுகிறது. இதை எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு தொழிலாளி வர்க்கம் ஏற்காது.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை முதலாளிகள் விருப்பு வெறுப்புக்கேற்ப விட்டுக்கொடுக்கும் நடவடிக்கையாகவே அமையும். மக்கள் நலன் சார்ந்த அரசு இது போன்ற உழைப்புச்சுரண்டலை அதிகரிக்கக்கூடிய சட்டத்தை இயற்றாது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் உழைக்கும் மக்களின் மீது ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு ஒத்திசைவாகவே மாநில அரசின் அணுகுமுறையும் உள்ளது. எனவே இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்தை திரும்பப்பெறும் வரை வலுவான போராட்டங்களை சிஐடியு தனித்தும், அனைத்து சங்கங்களையும் இணைத்துக்கொண்டும் போராடும் என்பதை ஆட்சியர்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறோம். அத்தகைய போராட்டங்களில் தமிழ்நாடு உழைப்பாளி மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அறைகூவல் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.