states

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்க!

சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.1- பழநி கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்புப் பலகை வைக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்திட வேண்டுமென தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் வழிபாட்டு நிலையங்களாக உள்ள கோவில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழநி கோவிலில் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர்களை அனுமதிக்க தடை விதித்து போர்டு வைக்க வேண்டுமென கலகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோரிக்கையை ஏற்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்றம் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் வழிபாட்டு நிலையங்களில் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் அமைதியாக செல்வதும், வழிபடுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும். மேலும் 1947 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோவில்கள் நுழைவு சட்ட விதியை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தில் இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரும் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் யாரையும் தடுக்கக் கூடாது என்று தான் தெளிவுபடுத்துகிறது. இதர மதத்தினர் கோவிலுக்குள் வருவதற்கு இச்சட்டம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவே, தமிழக அரசு இத்தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.