states

பாலியல் வல்லுறவு, தற்கொலைகள், பழங்குடியினரின் நிலம் அபகரிப்பு

உச்சநீதிமன்றத்தில் நிலையறிக்கை தாக்கல்

கடந்த செப்டம்பர் 30 அன்று, ஆட்கொணர்வு வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அறக்கட்டளை மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கு உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இடையே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நிலையறிக்கையையும் உச்ச நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. காா்த்திகேயன், 23 பக்க நிலை அறிக்கையை வியாழனன்று (அக்.17) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், ஈஷா மையத்தின் முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.  அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, 217 பிரம்மச்சாரிகள், 2455 தன்னார்வலர்கள், 891 ஊதியம் பெறும் பணியாளர்கள், 147 ஊதியம் பெறும் தொழிலாளர்கள், 342 ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள், 175 ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள், 704 பார்வையாளர்கள்/விருந்தினர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 912 விருந்தினர்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா அறக்கட்டளை தொடா்புடைய விவகாரத்தில் காணாமல் போனவா்கள் குறித்து ஆலந்தூர் காவல்நிலையத்தில் மொத்தம் 6 வழக்குகள் பதிவானதாகவும், அதில் 5 வழக்குகளில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதும் ஒரு வழக்கில் காணாமல் போனவா் இன்னும் கண்டறியப்படாததால் வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக சிஆா்பிசி (S. 174 CrPC) பிரிவு 174-இன் கீழ் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இரண்டு வழக்குகள், தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கின்றன. யோகா மையத்திற்குள் காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் சுடுகாடும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், அறக்கட்டளைக்கு அருகில் சொத்து வைத்திருக்கும் எஸ்.என். சுப்பிரமணியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்தை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமது இரு மகள்கள் (42 வயது மற்றும் 39 வயது) ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களது தந்தை தாக்கல் செய்த வழக்கில், அப்பெண்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த வழக்குகளைக் கடந்து, ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் உள்ளவர்களில் தோராயமாக 558 பேரிடம் காவல்துறையினர் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.  ஈஷா யோகா மையத்தில், ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த குழந்தைகள் நல நிபுணர்கள் பலரும், குழந்தைகளுக்கான உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் எடுத்துக்கூற வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அது மட்டுமல்ல, அங்கிருக்கும் பலருக்கும் மனநிலையில் தடுமாற்றம் இருப்பதாகவும், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்தால்தான் உண்மையை அறிய முடியும் என்றும் கூறியுள்ளனர். ஈஷா மருத்துவ மையம் குறித்து, கோவை சுகாதார சேவை துறையின் இணை இயக்குநர் விரிவான தகவலை அளித்துள்ளார். அதில், ஈஷா மருத்துவ மையத்தில் இருக்கும் கருவிகள் குறித்து சந்தேகம் எழுப்பியிருப்பதோடு, அங்கு பயிற்சிபெறாத நபர்கள் எக்ஸ்-ரே போன்றவற்றை இயக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தாங்கள் விசாரணை நடத்திய பெண்கள், தாங்களாகவே அங்கு தங்கியிருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், இயங்க வேண்டிய புகார் விசாரணை அமைப்பானது சரியாக இயங்கவில்லை.

ஈஷா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீதான வழக்குகள்:

(1) செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ‘மொபைல் ஹெல்த் சென்டர்’ மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்யும் போது, ​​இளம் பள்ளிச் சிறுமிகளைத் தகாத முறையில் தொட்டதற்காக, ஈஷா அவுட்ரீச் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட டாக்டர் சரவணமூர்த்தி மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 9 சிறுமிகளிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்துடன் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் மீது செப்டம்பர் 3 அன்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். (2) யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், நவீன் என்ற மற்றொரு பங்கேற்பாளரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐபிசி 376 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவரே 2021-இல் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

(3) 44.3 ஏக்கர் பரப்பளவில் பழங்குடியினரின் நிலத்தை, ஈஷா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை விசாரிக்கச் சென்ற கால்துறையினரின் வாகனத்தை தடுத்து, அச்சுறுத்தி சேதப்படுத்திய ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த 15 பேர் மீது டிஎன்பிபிடிஎல் (TNPPDL) சட்டத்தின் கீழ், ஐபிசி 341, 506 பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஹைதராபாத் பெற்றோரும்  ஈஷா மீது பாலியல் புகார் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் சிறுவனின் பெற்றோர், ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது மகனுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும், கொரோனா பொது முடக்கத்தின்போது தான் தங்களுக்கு இது தெரிய வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு, அங்கு நடந்த துன்புறுத்தல் காரணமாக, தங்கள் மகன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்களுக்கு கடிதம் எழுதிவைத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்றே, தங்களது 7 வயது மகள், ஈஷா அறக்கட்டளையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவர் இதுபற்றி கூறுகையில், கோவை ஈஷா உறைவிட பள்ளியில் இருந்து படித்த பல மாணவிகள், ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு வன்கொடுமை செய்யப்பட்ட பல மாணவிகளின் பெற்றோர்களைப் போலவே தானும் ஒருவர் என்றும், தனது மகள் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு புகார்களும் ஹைதராபாத்திலிருந்து பதிவாகியிருக்கின்றன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.