சென்னை,மார்ச் 20- தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் கைப்பற்றியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019-இல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. ‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 20) காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
ஆரம்பம் முதல் பாண்டவர் அணி முன்னிலை பெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,701 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட சங்கரதாஸ் அணியின் தலைவர் நடிகர் பாக்கியராஜை 647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாண்டவர் அணியில் பொதுச் செயலாளருக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோரும் மீண்டும் வெற்றி வாகை சூடினர். அதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். அதுமட்டுமின்றி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் பாண்டவர் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியிருக்கிறது. வெற்றி கொண்டாட்டத்தில் உள்ள பாண்டவர் அணி, “நலிந்த திரைக் கலைஞர்களுக்கு உதவி செய்வது, சங்கத்திற்கு சொந்த கட்டம் கட்டுவதே தங்களது முதல் பணி” என்று கூறியுள்ளது.