சென்னை,ஜூன் 21- சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களான 2,500 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கோரி டிஜிபி மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க் கிழமை (ஜூன்21) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “ காவல்துறை தரப்பில் 26 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு அதிமுக தரப்பில் பதிலளிக்கவில்லை” எனக்கூறினார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “பொதுக்குழுவைக் கூட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளருக்கே அதிகாரம் உள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட றிந்த நீதிபதி, “காவல்துறை எந்தத் தரப்பு என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். அதிமுக பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து காவல் துறை முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
விதிகளை திருத்த தடைவிதிக்ககோரி மனு
அதிமுக விதிகளில் புதிய திருத்தங் களை மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மூத்த நிர்வாகி கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி புதன்கிழமை(ஜூன் 22) அன்று விசாரிக்கப் படும் என்று கூறியுள்ளார். பொதுக்குழுவை திட்டமிட்டப்படி நடத்தி ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை தேவையில்லை இரட்டை தலைமை தொடர வேண்டும் என்று ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருவதால் அதிமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.