சென்னை, ஜூன் 23- திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் பட்டியலின மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார்.அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டத்தில் உள்ளது எடப்பாளையம், எம்ஜிஆர் நகர். இங்கு வசிக்கும் முருகன்,சரோஜா என்பவரின் மகள் மாணவி ராஜேஸ்வரி (வயது 17). பட்டியலின பன்னியாண்டி சமூகத்தை சார்ந்த இவர் பனிரெண்டாம் வகுப்பில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தந்தை முருகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
மேற்படிப்பை தொடர விரும்பிய ராஜேஸ்வரி, அதற்காக சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சாதிச் சான்று வழங்கப்படுவதில்லை.எனவே சாதிச்சான்று வழங்க இயலாது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தன்னால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும் என மனமுடைந்து 2023 ஜூன் 17 அன்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, ஜூன் 22 அன்று அதிகாலையில் மரண மடைந்தார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பன்னியாண்டி மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வரும் பன்னியாண்டி இன மக்களின் ரத்த உறவுகள் தான்.என்றாலும் திருவண்ணாமலையில் சாதிச்சான்று மறுக்கப் படுவது சரியானதல்ல. இங்கே இருக்கிற தடைதான் மாணவி ராஜேஸ்வரியின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பன்னியாண்டி இன மக்களுக்கு பட்டியலின சாதிச் சான்று, திருத்தப்பட்ட சட்டம் 1976 வரிசை எண் 55 இன்படி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவதோடு, மாணவி ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.